என் வெற்றியைவிட செந்தில் பாலாஜி வெற்றி முக்கியம்.. கோவையில் உடைத்து பேசிய உதயநிதி
கோவை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு 5 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கேவை தெற்கு தொகுதி தமிழ்நாடே உற்றுநோக்கும் தொகுதியாக மாறியுள்ளது. அங்கு பிரச்சாரம் செய்த உதயநிதி, என் வெற்றியை விட செந்தில் பாலாஜியின் வெற்றி முக்கியம் என்று அதற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.
கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது உதயநிதி பேசும்போது, "செந்தில் பாலாஜிக்கு கரூர் பிறந்த வீடு, கோவை புகுந்த வீடு. பிறந்த வீட்டை போல, புகுந்த வீட்டையும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வார்.

எடப்பாடி முரட்டு அடிமை
இந்தி திணிப்பிற்கு எதிராக ராணுவத்தையே எதிர்த்த வீரம், துணிச்சல் மிக்க இளைஞர்களை தந்தது கோவை மண். செந்தில் பாலாஜி மேற்கு மண்டலத்தை திமுக கோட்டையாக மாற்றி வைத்துள்ளார். செந்தில் பாலாஜியின் உழைப்பை பார்த்த பாசிச சக்திகள் இவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள்
பாசிச சங்கி கூட்டம் கோவையை அவர்களுடைய கோட்டை என்று நினைத்துக் கொள்கிறார்கள். இது திமுகவின் கோட்டை என்பதை செந்தில் பாலாஜி ஒவ்வொரு அசைவிலும் நிரூபித்து கொண்டிருக்கிறார். கோவையில் கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்தோம், அந்த தவறை மீண்டும் செய்து விடக்கூடாது. மோடியின் நம்பர் ஒன் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி.
கோவை கோரிக்கைகள்
மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு ஏதாவது திட்டங்களை கொடுத்துள்ளார்களா. தேர்தலுக்கு முன்பு மகளிர் உரிமைத் தொகையை நிறுத்துவதற்கு அதிமுக, பாஜக நினைத்தார்கள். ஆனால் நம்முடைய முதலமைச்சர் முன்கூட்டியே மூன்று மாத மகளிர் உரிமைத் தொகை மற்றும் கோடை கால சிறப்பு தொகை கொடுத்தார்
பெரிய கடை வீதி, கிராஸ்கட் சாலையில் மல்டி லெவல் ஷாப்பிங் மால் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். நம்முடைய ஆட்சி அமைந்ததும் அது செய்து தரப்படும். புலியகுளம், அம்மன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டா வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. நம் ஆட்சி அமைந்த உடன் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
செந்தில் பாலாஜி வெற்றி அவசியம்
சங்கி கூட்டத்தை தமிழ்நாட்டிற்குள் விடக்கூடாது. அப்படி விட்டால் நமக்கு டேஞ்சர். முக்கியமாக கோயம்புத்தூர் மிகவும் முக்கியம். நான் சேப்பாக்கத்தில் வேட்பாளராக நிற்கிறேன். அதை அவ்வப்போது மறந்துவிடுகிறேன் ஏனென்றால் அந்த தொகுதியில் ஒரே ஒருமுறைதான் வாக்கு கேட்டுச் சென்றுள்ளேன்.
எனக்கு என்னுடைய தொகுதியை விட செந்தில் பாலாஜி மற்றும் செந்தமிழ் செல்வனின் வெற்றி மிக மிக முக்கியம். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி வெற்றியை விட கோவையின் வெற்றி மிக மிக முக்கியம். இருவரின் வெற்றி என்பது எதிர்த்து நிற்பவர்களின் டெபாசிட் போகின்ற அளவிற்கு இருக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications