கோவை, மேட்டுப்பாளையம், தூத்துக்குடிக்கு இன்று புதிய ரயில் சேவை.. எல் முருகனுடன் பங்கேற்கும் ஆ ராசா
கோவை: மேட்டுப்பாளையத்தில் இருந்து போத்தனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில் மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் புதிய ரயில் சேவையை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று தொடங்கி வைக்கிறார்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் இன்று முதல் போத்தனூர் வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது . மேட்டுப்பாளையத்தில் இருந்து போத்தனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில் (வண்டி எண்.16766/16765) சேவையை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல். முருகன், மேட்டுபாளையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இதேபோல, மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இடையே வாரத்தில் 2 நாள் மட்டும் இயக்கக்கூடிய புதிய ரயிலையும் தொடங்கி வைக்கிறார். நீலகிரி தொகுதி எம்பி ஆ.ராசா எம்.பி., செல்வராஜ் எம்.எல்.ஏ., மேட்டுப்பாளையம் நகர்மன்ற தலைவர் மகரிபா பர்வின் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இன்றைய விழாவில் கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் சாமல்பட்டி ரெயில் நிலையத்தில் கூடுதல் நிறுத்தமாக நின்று செல்வதையும், மைசூரு - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயிலை கடலூர் துறைமுகம் வரை நீட்டித்தும், தற்போது வாரத்தில் 5 நாள் மட்டும் இயக்கப்படும் மயிலாடுதுறை - திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரயிலாக இயக்குவதையும் அமைச்சர் எல்.முருகன் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "மத்திய அமைச்சர் எல் முருகன் தொடங்கி வைக்கும் மேட்டுப்பாளையம் ரயில் மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை 8.20, மதியம் 1.05 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கோவை செல்லும் மின்சார ரெயிலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மட்டும் இரவு 6.55 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் மின்சார ரெயிலும் வரும் 20-ந்தேதி முதல் போத்தனூர் வரை நீட்டிக்கப்படுகிறது.
தூத்துக்குடியிலிருந்து வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையம் செல்லும் ரயில் (16766) வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 7.40 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். மறுமார்க்கமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி வரும் ரயில் (16765) சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமை காலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். புதிதாக தொடங்கப்பட்ட இந்த ரெயில் சேவை வாரத்தில் 2 நாட்கள் மட்டும் இயக்கப்படும்.
கோவையிலிருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22616) வரும் 21-ந்தேதி முதல் கூடுதல் நிறுத்தமாக சாமல்பட்டியில் நின்று செல்லும். மறுமார்க்கமாக, திருப்பதியில் இருந்து கோவை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22615) வரும் 22-ந்தேதி முதல் கூடுதல் நிறுத்தமாக சாமல்பட்டியில் நின்று செல்லும்.
மைசூருவில் இருந்து மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16232) இன்று (வெள்ளிக்கிழமை) முதல் கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, மயிலாடுதுறையிலிருந்து புறப்பட்டு மைசூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16231), அதற்கு மாற்றாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நீட்டிக்கப்பட்டுள்ள கடலூர் துறைமுகத்தில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு மைசூரு செல்லும்.
மயிலாடுதுறையில் இருந்து திருச்சி வரும் எக்ஸ்பிரஸ் ரயிலும், திருச்சியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும், வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்பட்டு வந்தது. நாளை (சனிக்கிழமை) முதல் இந்த ரயில்கள் தினசரி இயக்கப்பட உள்ளது. மேலும், ஏற்கனவே உள்ள எக்ஸ்பிரஸ் ரயில்களின் வண்டி எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மயிலாடுதுறை - திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் வண்டி எண். 16233-க்கு மாற்றாக 16833- ஆகவும், திருச்சி - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் வண்டி எண். 16234-க்கு மாற்றாக 16834- ஆகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது" இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications