கோவை மாணவி தற்கொலை விவகாரம்.. சவால்களை முறியடித்து வெற்றி வாகை சூடுங்கள்.. சசிகலா அட்வைஸ்
கோவை: கோவை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது வருத்தமளிக்கிறது என வி.கே. சசிகலா அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் முன் இருக்கும் சவால்களை முறியடித்து பெண்களும் மாணவிகளும் வெற்றி வாகை சூட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கோவையில் சின்மயா வித்யாலயா பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவி கடந்த வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியும் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

சசிகலா அறிக்கை
இந்த விவகாரம் தொடர்பாக வி. கே. சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை உக்கடத்தை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி, தனியார் பள்ளி ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு மனவேதனையடைந்து தற்கொலை செய்துக்கொண்ட செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.

தற்கொலைக்கு காரணம்
மாணவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மாணவியின் தற்கொலைக்கு காரணமாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறை நேர்மையாக விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதுகாப்பு
கல்வி கூடங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் கல்வி நிறுவனங்களுக்கு இருக்கிறது. இதை சரியாக கடைபிடிக்காமல் போனால் மாணவ, மாணவியர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். கல்வி கூடங்கள் மட்டுமல்ல, பெண்கள் வேலை பார்க்கும் அலுவலகமோ அல்லது எந்த இடமாக இருந்தாலும் இதுபோன்று பொறுப்பற்று பெண்களை அச்சுறுத்தி பாதுகாப்புக்கு ஊறு விளைக்கும் ஆட்கள் இருந்தால், சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரோ, உடன் இருப்பவர்களோ அவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தால் தான் இதுபோன்ற தற்கொலைகள் நிகழாமல் தடுக்க முடியும்.

பெண்ணாக பிறந்த அனைவரும்
மாணவிகள் மற்றும் பெண்ணாக பிறந்த அனைவரும் மிகுந்த தன்னம்பிக்கையோடு தைரியமாக எத்தகைய சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு வாழவேண்டும் அப்போதுதான் எந்த சவால்களையும் முறியடித்து எதிலும் வெற்றி வாகை சூட முடியும். தவறு இழைக்கும் கல்வி நிறுவனங்களை தமிழக அரசு கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்த மாணவ மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சசிகலா தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications