கோவை பாஜக அலுவலகத்தில் மாலையில் அத்துமீறி நுழைந்த நபர்.. இரவில் திடீர் மரணம்! வானதி விளக்கம்
கோவை: அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர் என்ன நோக்கத்திற்காக வந்தார் என்று தெரியவில்லை என்று கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். மாலையில் அலுவலகத்திற்குள் அத்துமீறி புகுந்த நபர் இரவில் உயிரிழந்து விட்டதாக தகவல் தெரியவந்தது. யார் அவர் எதற்காக வந்தார் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசனின் அலுவலகத்திற்குள் நேற்று மாலை 5.50 மணியளவில் மர்ம நபர் ஒருவர் எவ்வித அனுமதியும் இன்றி உள்ளே வந்துள்ளார். மேலும் அந்த நபர் அலுவலகத்திற்குள் வந்து கதவை சாத்திய நிலையில், அலுவலகத்தில் இருந்த விஜயன் என்பவர் அவரை அலுவலகத்தை விட்டு வெளியே தள்ளினார்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த விஜயன் மர்ம நபரை வேகமாக சாலையில் தள்ளி விட்டார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளன. மர்ம நபர் அலுவலகத்திற்குள் புகுந்தது குறித்து இரவு 8.30 மணியளவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர் அண்ணா சிலை சிக்னல் அருகே உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சாலையில் வாகனம் மோதி உயிரிழந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், பொதுமக்களை சந்திப்பது, பொதுமக்களோடு உணவருந்துவது என திட்டமிட்டு செய்து கொண்டிருக்கோம், இலவச கேஸ் இணைப்பு பெற்றவர்கள். சாலையோர வியாபாரிகள் கடன் பெற்றவர்கள், முத்ரா வங்கி திட்டத்தில் கடன் பெற்றவர்களை சந்தித்து கொண்டிருக்கிறோம். வெளிநாட்டு நிறுவனங்கள் கோவையில் முதலீடு செய்து கொண்டிருக்கின்றனர்.
பல்வேறு மக்களை சந்தித்து அரசு நலத்திட்டங்களை பற்றி மக்களை சந்தித்து கலந்துரையாடி வருகிறோம். மத்திய அரசு புதிதாக ஏற்படுத்தி உள்ள கட்டமைப்புகள்பற்றி மக்களிடம் கூறி வருகிறோம் என்று சொன்னார். கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்ட தீர்ப்பு வந்துள்ளது. கடந்த பல ஆண்டுகாலமாகவே பாஜகவினர் மீதும் இந்து அமைப்பினர் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. வன்முறை எதற்கும் தீர்வாகது என்று சொன்னார்.
தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், நேற்று மாலை 5,30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் கதவை மூட முயன்றார். எனது உதவியாளர் அவரை வெளியே தள்ளினார். சில மணிநேரங்களில் அந்த நபர் உயிரிழந்து விட்டார். அந்த நபர் யார்? அவர் போதையில் இருந்தாரா? எதற்காக எனது அலுவலகத்திற்கு வந்தார் என்று தெரியவில்லை. நேற்று மாலையே நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம். அவரது நோக்கம் என்னவாக இருக்க முடியும் என்று எங்களுக்கு தெரியவில்லை.
காவல்துறை ஆய்வாளரிடம் இது குறித்து பேசியுள்ளேன். யார் அந்த நபர் என்று விசாரிக்க கூறியுள்ளோம். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நடக்கம் போது நான் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். உதவியாளர் என்னை தொடர்பு பேசினார் உடனடியாக நான் புகார் அளிக்கச் சொன்னேன் அவர் புகார் அளித்துள்ளார் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications