நீட் விலக்கு ரகசியம் இருப்பதாக ஒரு தமிழக அமைச்சர் சொன்னாரே, என்னாச்சு.. வானதி சீனிவாசன் கேள்வி
கோவை: சமூக நீதியை தமிழக அரசால் மாணவர்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை என்பது மோசமான விஷயம் என எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை தேவாங்கபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி அருகே புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில் தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு உதவித் தொகை கிடைக்காத நிலை இருக்கிறது. இதை மாற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது.
அதை எப்படி ரத்து செய்ய வேண்டும் என்பதற்கான ரகசியம் தெரியும் என சொன்னவர் ஒரு திமுக அமைச்சர் (உதயநிதி). ஒவ்வொரு உயிரிழப்பு ஏற்படும் போது அதற்கென ஒவ்வொரு காரணம் இருக்கிறது. தற்கொலை செய்ய வேண்டும் என யாரும் நினைக்க மாட்டார்கள். முதல்வர் என்பவர் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானவர்.
நீட் தொடர்பாக ஆளுநர் மீது பாய்வதை விட்டுவிட்டு தமிழகத்தில் எத்தனையோ தற்கொலைகள் நடக்கின்றன. எல்லா மனித உயிர்களையும் முதல்வர் ஒரே மாதிரி பார்க்க வேண்டும். நாங்குநேரி சம்பவம் என்பது அதிர்ச்சிகரமானது. ஒன்றாக பழகி, விளையாடி சகோதரத்துவத்தை ஏற்படுத்த வேண்டிய வயதில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.
சமூக நீதி போதிக்கும் தமிழகத்தில் இளம் வயது மாணவர்கள் இந்த மாதிரியான ஜாதி ரீதியிலான தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது சினிமாவின் தாக்கமாக இருக்கலாம். இல்லாவிட்டால் சுற்றி இருப்போரின் தாக்கமாக இருக்கலாம். தமிழகத்திற்கு இது ஆபத்தானது. அரசால் சமூகநீதியை மாணவர்களிடம் கூட கொண்டு சேர்க்க முடியவில்லை என்பது மிகவும் மோசமான விஷயம்.
பிரிவினையை வைத்து வெறுப்பை விதைக்கும் பல விஷயங்கள் நம்மை சுற்றி நடந்து கொண்டிருக்கின்றன. இதை அரசு கவனமாக கையாள வேண்டும். இவ்வாறு வானதி தெரிவித்தார். அந்த அங்கன்வாடி மையத்தில் உணவை சாப்பிட்டு பார்த்தார் வானதி. நாங்குநேரியில் பட்டியலின மாணவர் தொடர்ந்து பள்ளியில் துன்புறுத்துலுக்குள்ளானதை அறிந்த காவல் துறை அந்த மாணவர்களை எச்சரித்தது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த ஜாதி வெறி கொண்ட மாணவர்கள் பட்டியலின மாணவர் சின்னத்துரையின் வீட்டிற்கு சென்று அவரை அரிவாளால் வெட்டினர். இதை தடுக்க வந்த அவரது தங்கையையும் அந்த மாணவர்கள் வெட்டியுள்ளனர். தற்போது இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications