பரப்புரையில் பம்பரமாக சுழலும் எஸ்.பி.வேலுமணி! கமகமக்கும் பிரியாணியுடன் பரிசுப்பொருட்கள்!
கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பம்பரமாக சுழன்று பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
நீயா நானா என்கிற வகையில் அமைச்சர் செந்தில்பாலாஜியும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் செயல்படுவதால் கோவையில் அரசியல் களம் அனல் பறக்கிறது.
இதனால் சென்னை மாநகராட்சி தேர்தலை காட்டிலும் கோவை மாநகராட்சி தேர்தல் தமிழகம் தழுவிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகிவிட்டன. கூட்டணிப் பேச்சுவார்த்தை, இடப்பங்கீடு, தேர்தல் வியூகம் என திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிலும் பரபரப்பாக பணிகள் நடைபெறுகின்றன. ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் பெற்ற வெற்றியை தக்க வைக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது.

நம்பிக்கை
இதனால் அதற்கேற்ப செயல்திட்டங்களை வகுத்து ஸ்டாலின் காரியம் ஆற்றத் தொடங்கியிருக்கிறார். அந்த வகையில் கோவை மாநகராட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் மிக உறுதியாக உள்ள அவர், அங்கு பொறுப்பு அமைச்சராக செந்தில்பாலாஜியை களம் இறக்கியிருக்கிறார். திமுக நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வரும் அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை மேயர் பதவியில் திமுகவை சேர்ந்த ஒருவர் தான் அமருவார் என நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.

எஸ்.பி.வேலுமணி
இந்நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, நேரடியாக வாக்காளர்களை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு திரட்ட தொடங்கியிருக்கிறார். எந்த வார்டுக்கு செல்கிறாரோ அந்த வார்டு மக்களுக்கு சுடச்சுட பிரியாணி விருந்து கொடுத்து அசத்துகிறார் எஸ்.பி.வேலுமணி. அதுமட்டுமல்லாமல் பரிசுப் பொருட்கள் கொடுப்பதிலும் தாராளம் காட்டுகிறார்.

நன்றி அறிவிப்பு
பிரச்சாரம் என்ற பெயரில் செல்லாமல் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு என்ற பெயரில் எஸ்.பி.வேலுமணி மக்களை வீதிவீதியாக சந்திக்க தொடங்கியிருக்கிறார். இவருக்கு போட்டியாக விரைவில் அமைச்சர் செந்தில்பாலாஜியும் விரைவில் களப்பிரச்சாரத்தை முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications