நம்ம சா(ஜா)தகம் உள்ளே போகாது மணியா!.. சுயம்வரத்தில் கொங்கு தமிழில் பொங்கும் கோயமுத்தூர் மாப்பிள்ளை
கோவை: கோவையில் சுயம்வரம் நிகழ்ச்சிக்கு வந்த ஒரு இளைஞர் கொங்கு தமிழில் குமுறும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.
80ஸ், 90ஸ் கிட்ஸ்களுக்கு இன்னமும் திருமணம் ஆகாமல் உள்ளது. அதிலும் மணமகன்களுக்கு பெண் கிடைப்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. எத்தனையோ மேட்ரிமோனிகள், திருமண பதிவு மையங்கள் இருந்தாலும் அவற்றில் யாரோ சிலருக்குத்தான் திருமணம் கைகூடுகிறது.
பெரும்பாலானோருக்கு பணமும், நேரமும்தான் விரயம் ஆகிறதே தவிர திருமணமான பாடில்லை. இதற்காக எத்தனையோ பரிகாரங்கள், பூஜைகளை எல்லாம் பெற்றோர் செய்து பார்க்கிறார்கள். இதற்கு காரணம் திருமணத்திற்கு பெண்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் ஆண்கள் நிறைய பேர் இருப்பதும்தான் என சொல்லப்படுகிறது.

திருமணத்திற்கு பதிவு
அதாவது ஒவ்வொரு சமூகத்திலும் திருமணத்திற்கு பதிவு செய்யும் மணமகன்களை காட்டிலும் மணமகள்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் பெண் கிடைப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. அப்படியே கிடைத்தாலும் பெண்கள், அவரது பெற்றோரின் எதிர்பார்ப்புகள் அதிக அளவில் இருப்பதாக மாப்பிள்ளை வீட்டார் குற்றம்சாட்டுகிறார்கள்.

வெளிநாட்டு மாப்பிள்ளை
வெளிநாட்டு மாப்பிள்ளைதான் வேண்டும், திருமணமானவுடன் கணவருடன் தனிக்குடித்தனம், மணமகன் பெயரில் சொந்த வீடு, வாசல், தோட்டம், நிலம். அரசு வேலை, டாக்டர், என்ஜீனியர், மாதம் 75 ஆயிரத்திற்கு மேல் சம்பளம் என பெண்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதில் பெரும்பாலானோர் மணமகளின் கோரிக்கை வரம்பிற்குள் வருவதே இல்லை.

சுயம்வரம் நிகழ்ச்சி
இதனால் தற்போது சுயம்வரம் எனும் நிகழ்ச்சி பிரபலமாகிவிட்டது. ஒரு குறிப்பிட்ட பொதுவான இடத்திற்கு பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் வருவர். அப்போது ஜாதகங்கள் பரிமாற்றம் நடைபெறும். இரு தரப்புக்கும் பிடித்த ஜாதகங்கள் பொருத்தம் பார்க்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்படும். பின்னர் பிடித்திருந்தால் போனில் தகவல் தெரிவிப்பர். இந்த பாணியை பெரும்பாலானோர் கடைப்பிடிக்கிறார்கள்.

கோவையில் சுயம்வரம் நிகழ்ச்சி
இந்நிலையில் கோவையில் புற நகர் பகுதி தனியார் மண்டபத்தில் ஒரு சமூகத்தினர் சுயம்வரம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். அதில் கலந்து கொள்வதற்காக வந்த மாப்பிள்ளை ஒருவரின் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அந்த நபர் பேசுகையில் என்னன்னா, சா(ஜா)தகம் பார்க்குறதுக்கு வந்தேன். இங்கே இப்படியிருக்குது கூட்டம். நம்ம சாதகம் எல்லாம் உள்ளே போகுமா? நான் அப்பவே சொன்னேன் மணியா கேக்கறீங்களா!

25 ஏக்கரா கேக்குறாங்க
நம்மூர் பெண்ணை திருமணம் செய்து கொள்வதை விட்டு விட்டு இங்கு இந்த கூட்டத்தில் சாதகத்தை எப்படி கொடுப்பது? எல்லாருமே மாப்பிள்ளை வீட்டை சேர்ந்தவர்கள்தான் வந்துள்ளார்கள். பெண் வீட்டார் வரவில்லை. நம்ம சாதகம்லாம் உள்ள போகாது மணியா? கேக்கறவங்க பூரா 25 ஏக்கரா கேக்குறாங்க! 25 ஏக்கரா இருந்தா நான் ஏன் இங்க வாரேன்? இதை அருகில் இருந்த அவரது நண்பர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளனர். கொங்கு தமிழில் குமுறும் கோயமுத்தூர் மாப்பிள்ளையின் வீடியோ வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications