கோவை வரும் துணை ஜனாதிபதி.. சமூகவலைதளங்களில் பரவும் விஷமத்தனமான தகவல்.. போலீஸ் எச்சரிக்கை
கோவை: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கடந்த வாரம் கோவை வந்திருந்தார். இந்நிலையில் நாளை மறுநாள் (நவம்பர் 4 ஆம் தேதி) மீண்டும் கோவை வருகை புரியவுள்ளார். ஒன்னிப்பாளையம் கருப்பராயன் கோயிலில் பிரம்மாண்ட திருவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது. அதில் சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பெண்கள் கலந்து கொள்ள தடை என்று தவறான தகவல் பரப்பப்படுகிறது என்று காவல்துறை எச்சரிக்கை விட்டுள்ளது.
சி.பி ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல்முறையாக கடந்த வாரம் தமிழ்நாடு வந்தார். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தேவர் ஜெயந்தி விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். பாஜக மட்டுமல்லாமல் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் அவரைச் சந்தித்தனர்.

துணை ஜனாதிபதி வருகை
துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல்முறையாக வந்தது குறித்து சி.பி. ராதாகிருஷ்ணன் நெகிழ்ச்சியாக கூறியிருந்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்றும் ராதாகிருஷ்ணன் சொல்லியிருந்தார். தமிழ்நாட்டில் 4 நாட்கள் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிலையில் அவர் மீண்டும் டெல்லிக்கு சென்றார்.
இந்நிலையில் ஒரே வாரத்தில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மீண்டும் கோவை வரவுள்ளார். காரமடை அருகே உள்ள ஒன்னிபாளையம் பகுதியில் எல்லை கருப்பராயன் கோயில் உள்ளது. அங்கு வருகிற நவம்பர் 4 ஆம் தேதி திருவிழக்கு பூஜை நடைபெறவுள்ளது. இதில் சுமார் 10,008 பெண்கள் கலந்து கொண்டு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
விளக்கு பூஜை
இதில் சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார். இதற்காக வருகிற 4 ஆம் தேதி அவர் மீண்டும் கோவை வருகை தரவுள்ளார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. துணை ஜனாதிபதி நிகழ்ச்சி என்பதால் பாதுகாப்பு கருதி, காவல்துறை சாப்பில் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதேநேரத்தில் இந்த நிகழ்ச்சியில் பெண்கள் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தவறான செய்தி பரப்பப்படுகிறது என்று காவல்துறை கூறியுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கோவை மாவட்டத்தில் வருகின்ற 4 ஆம் தேதி ஒன்னிப்பாளையம், எல்லை கருப்பராயன் கோயிலில் விளக்கு பூஜை நடைபெற உள்ளது.
பொய்யான தகவல்
அதனை ஒட்டி முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதன் காரணமாக சில வழிகாட்டு விதிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதனை தவறாக சித்தரித்து சிலர் திருவிளக்கு பூஜையில் பெண்களுக்கு தடை என்ற முற்றிலும் தவறான மற்றும் அமைதியை குலைக்கும் வகையில் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
இது உண்மைக்கு புறம்பானது. இவ்வாறு தவறான செய்திகளை பரப்பும் நபர்கள் மீது கடுமையான சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்." என்று எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications