முதல்வரின் ஊழல் பட்டியல் மே 23ஆம் தேதிக்கு பிறகு வெளியிடப்படும்.. டிவிஸ்ட் வைக்கும் புகழேந்தி!
கோவை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஊழல் பட்டியல் மே 23 ஆம் தேதிக்கு பிறகு வெளியாகும் என அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான உச்சக்கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி பிரச்சாரம் செய்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

நாகரீகம் அல்ல
அவர் பேசியதாவது, தேர்தல் பிரசாரத்தின்போது எப்படி பேச வேண்டும் என தெரியாமல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார். நாக்கை அறுப்போம் என ஒரு அமைச்சரே பேசுவது நாகரீகம் அல்ல.

மவுனமாக இருப்பது ஏன்?
கமல்ஹாசனின் கருத்து தவறு என்றால் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கலாம். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசுவதை பார்த்துவிட்டு, கண்டனம் தெரிவிக்காமல் முதல்வர் மவுனமாக இருப்பது ஏன்? இன்று நடிகர் நாக்கை அறுப்பேன் என்பவர், நாளை முதல்வரின் நாக்கை அறுப்பேன் என்பார்.

முதல்வர் விளக்க வேண்டும்
அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை உடனடியாக கைதுசெய்ய வேண்டும். அவர், அமைச்சர் பதவிக்கு தகுதியில்லாதவர். அவரது அமைச்சர் பதவியை, தமிழக முதல்வர் பறிக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் பதவி கொடுத்தது சசிகலாவா? ஜெயலலிதாவா? என்பதை, முதல்வர் விளக்க வேண்டும்.

ஊழல் பட்டியலை வெளியிடுவோம்
வரும் 23ம் தேதி தேர்தல் முடிவிற்கு பின்னர் முதல்வரின் ஊழல் பட்டியலை வெளியிடுவோம். எந்தெந்த வேலைகளில் எவ்வளவு ஊழல் செய்தார்கள் என்ற பட்டியலும் வெளிவரும். முதல்வருடன் சேர்ந்து, 4 அல்லது 5 அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி. இவ்வாறு புகழேந்தி கூறினார். புகழேந்தியின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications