ஆன்லைன் ரம்மி சட்டம்! ஆளுநர் அனுமதி தரலையே.. வந்து விழுந்த கேள்வி.. பட்டுனு பதில் சொன்ன சத்யராஜ்
கோவை: "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" என்ற இந்த புகைப்பட கண்காட்சியைத் தொடங்கி வைத்த நடிகர் சத்யராஜ் அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பல முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாள் விழா கடந்த மார்ச் மாதம் கொண்டாடப்பட்டது. இதற்கு திமுக சார்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில், புகைப்பட கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

முதலில் தலைநகர் சென்னையில் இந்த புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் முதல்வர் ஸ்டாலினின் இளமைப் பருவம், 50 ஆண்டு அரசியல் பயணம், மிசா காலகட்டம் ஆகியவற்றை விளக்கும் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
முதல்வர் புகைப்பட கண்காட்சி: சென்னையில் நடந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். சென்னையைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் இதுபோன்ற புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இப்போது கோவையில் இந்த புகைப்பட கண்காட்சி தொடங்கியுள்ளது. "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" என்ற இந்த புகைப்பட கண்காட்சியைத் தொடங்கி வைத்த நடிகர் சத்யராஜ் அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "முதல்வரின் புகைப்பட கண்காட்சியைச் சென்னையில் ஆரம்பித்தார்கள். அப்போதே என்னை அழைத்தார்கள் என்னால் செல்ல முடியவில்லை. இப்போது கோவையில் அமைத்துள்ளார்கள். இதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. நான் எப்போதும் கோவைக்கு மாதம் ஒரு முறை வந்துவிடுவேன். அப்படிதான் இது சரியாக அமைந்தது. அவரது கஷ்டங்கள் தொடங்கி அனைத்தையும் பதிவு செய்துள்ளனர்.
பிடித்த படம்: அவர் மிசாவில் கைதாகவே இல்லை. சிறையில் இல்லை என்றெல்லாம் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் எப்ஐஆருடன் பதிவை வைத்துள்ளார்கள். ஆதாரத்துடன் இந்த புகைப்பட கண்காட்சியை அமைத்துள்ளனர். கருணாநிதி போல வேடமணிந்து ஸ்டாலின் ஒரு பிரசார மேடையில் நடிக்கிறார். அதை எம்ஜிஆர் பாராட்டுவது போல ஒரு படம் இருக்கிறது. அதுதான் எனக்குப் பிடித்த போட்டோ.

நாம் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும். வரலாற்றை அறிந்து கொண்டால் தான் சித்தாந்த தெளிவு நமக்குக் கிடைக்கும். அந்த சித்தாந்த தெளிவை நமக்கு இந்த புகைப்பட கண்காட்சி தருகிறது. திமுக இரண்டு ஆண்டு ஆட்சி மிகவும் திருப்திகரமாக இருக்கிறது. நடுத்தர மற்றும் ஏழை மக்களிடம் இந்த அரசு குறித்துப் பேசியுள்ளேன். அவர்கள் முழு திருப்தியாக இருக்கவே சொல்கிறார்கள். எந்த ஆட்சி வந்தாலும் நாங்கள் நல்லா இருப்போம்; ஆனால் ஸ்டாலின் சார் ஆட்சியில் சாதாரண மக்களும் நல்லாருக்காங்க.
குறிப்பாக 1.50 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பை வழங்கியுள்ளனர். சான்றுகளுடன் சாதனைகளை விளக்கி வருகிறார்கள். நமது முதல்வர் துணிச்சலானவர். எங்கே துணிச்சலாக இருக்க வேண்டுமோ அங்கே துணிச்சலாக இருக்கிறார்கள். தமிழக மக்களுக்கு நன்மையை ஏற்படுத்த எங்கே அரவணைத்துச் செல்ல வேண்டுமோ அங்கே அரவணைத்தும் செல்கிறார்.
ஆளுநர் விவகாரம்: மக்கள் நலன் தான் முக்கியம். தமிழ்நாடு மக்களின் நலன் கருதி சட்டசபை கொண்டு வரும் நல்ல திட்டங்களுக்கு ஆளுநர் அனுமதி தர வேண்டும். அவர் ஏன் இப்படிச் செய்கிறார் என்று தெரியவில்லை. மக்கள் நலத்திட்டங்களுக்கு ஆளுநர் அனுமதி தர வேண்டும். ஆன்லைன் ரம்மி காரணமாகப் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதையெல்லாம் மனதில் வைத்து முடிவு செய்ய வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications