கோவையில் ஸ்கூட்டரில் சுருண்டு பதுங்கியிருந்த பாம்பு.. பெட்ரோல் போட திறந்தபோது நடந்த ட்விஸ்ட்
கோவை: இருசக்கர வாகனங்களை மழைக்காலத்தில் வெளியில் எடுத்து செல்லும் போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் மழை காரணமாக இரவு நேரத்தில் வெளியில் வரும் பாம்புகள், அந்த பகுதிகளில் இரைகளை தேடிவிட்டு, சூடான இடம் வேண்டும் என்று சுற்றும். அப்போது, பைக்கில் போய் படுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அப்படித்தான் கோவையில் இருசக்கர வாகனத்தில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது தெரியவந்துள்ளது.
பாம்புகள் பொதுவாக எலி, தவளை, பூச்சி உள்ளிட்ட இரைகளை தேடி இரவில் வலம் வரும். வீட்டை சுற்றி காடுகள் இருந்தாலோ அல்லது வீட்டை சுற்றிலும் புதர் மண்டியிருந்தாலோ பாம்புகள் வர வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக மக்கள் நடமாட்டம் இல்லாத, காடுகளாக மாறியுள்ள பிளாட்டுகளிலும் பாம்புகள் வசிப்பிடமாக உள்ளன. வீட்டு மனைகள் காடுகள் போல் புதர் மண்டிக்கிடந்தால் பாம்புகள், எலிகள் வர அதிக வாய்ப்பு உள்ளது.

இப்போது மழைக்காலம் என்பதால் சர்வ சாதாரணமாக பாம்புகளை வெளியில் காண முடியும்.
தங்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியே வரும் பாம்புகள், இரை தேடிய பின்னர், சூடான இடம் தேடி அலைகின்றன. அப்படி அலையும் பாம்புகள், வீட்டின் வாசலில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் ஏறி பதுங்குவது அடிக்கடி நடக்கின்றன. குழந்தைகள் அணியும் ஷூக்களில் கூட பாம்புகள் படுத்துக் கொள்கின்றன. எனவே இருசக்கர வாகனத்தை எடுக்கும் போது, நான்கு தட்டிவிட்டு, ஏதேனும் விலங்கு உள்ளதா என்பதை சோதித்துவிட்டு, வாகனத்தை வெளியில் எடுத்துச் செல்லுங்கள்.
பள்ளிக்கு செல்லாத காரணத்தால் ஷூக்கள் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் சுத்தம் செய்யப்படாமல் ஷூக்கள் இருக்கும். அவற்றை சுத்தம் செய்யும் போது, குழந்தைகளுக்கு அணிவிக்கும் முன்பும் , உள்ளே பாம்பு , பல்லி உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளதா என்பதை சோதித்துவிட்டு அணிவியுங்கள். சில நேரங்களில் அதற்கு வாய்ப்பு உள்ளது. கோவையில் பாம்பு ஒன்று இருசக்கர வாகனத்தில் பதுங்கி இருந்தது. அது எப்படி தெரியவந்தது என்பதை பார்ப்போம்.
கோவை அருகே பன்னிமடையை சேர்ந்த நாகலட்சுமி என்பவர் தனியார் கல்லூரி ஊழியர் ஆவார். இவர் நேற்று கல்லூரிக்கு ஸ்கூட்டரில் புறப்பட்டார். இடையில் அவர், தனது ஸ்கூட்டருக்கு கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு பங்கிற்கு பெட்ரோல் போட சென்றிருக்கிறார். அங்கு ஸ்கூட்டரில் பெட்ரோல் நிரப்புவதற்காக சீட்டை திறந்தார். அப்போது சீட்டுக்கு அடியில் பச்சை நிறத்தில் பாம்பு ஒன்று நெளிந்தபடி உள்ளே இருந்தது.
அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாகலட்சுமி பாம்பு, பாம்பு என்று கூச்சலிட்டார். உடனே பெட்ரோல் பங்க் ஊழியர்கள் விரைந்து வந்தனர்.இதனிடையே ஸ்கூட்டரில் அதிர்வுகளை உணர்ந்த பாம்பு, உடனே வெளியே வந்து அங்கிருந்த மரத்தில் ஏறி தப்பி சென்றது. இதனால் நாகலட்சுமி மற்றும் அங்கிருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர். நாக லட்சுமியின் வீட்டின் அருகே தோட்டம் இருக்கிறது. எனவே அங்கிருந்து வந்த பாம்பு, வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த ஸ்கூட்டரின் சீட்டுக்கு அடியில் பதுங்கி இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வீட்டின் அருகே தோட்டம் உள்ளவர்கள் மழைக்காலத்தில் கவனமாக இருப்பது நல்லது.












Click it and Unblock the Notifications