கோலாட்டம் ஆடிய மாணவியின் வாயில் ’விசில்’.. அத்தனை பேர் முன்னிலையில் தேர்தல் அதிகாரி செய்த செயல்!
கோவை: கோவையில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி இருக்கிறது. வாயில் விசில் வைத்தபடி மாணவி ஒருவர் கோலாட்டம் ஆடிக் கொண்டிருக்க திடீரென மேடை ஏறிய தேர்தல் அதிகாரி அந்த விசிலை பறித்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் விசில் என்பதால் அவர் அவ்வாறு நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
2026 சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது. காவல்துறையினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினர் இணைந்து வாகன தணிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அது மட்டும் அல்லாமல் சட்ட விரோதமாக வாக்குக்கு பணம் கொடுப்பது, பொருட்கள் கொடுப்பது ஆகியவற்றை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அளவிலான அதிகாரிகள் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் தங்கள் பகுதிகளில் தேர்தல் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் நூறு சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கை எட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
பேரணிகள் கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாணவிகள் கோலாட்டம் ஆடினர்.
அப்போது ஒரு மாணவி தனது வாய் வாயில் விசிலை வைத்து ஊதிக்கொண்டிருந்தார். இதனால் அதிர்ந்து போன தேர்தல் அதிகாரி விறுவிறுவென மேடையைச் சென்று அந்த மாணவியின் வாயிலிருந்து விசிலை பிடுங்கி விசிலை வைத்து எல்லாம் ஊதக் கூடாது என சொல்லியபடி அதனை வாங்கி கீழே இறங்கி சென்றார். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து சமூக வலை தளங்களில் அந்த சின்னத்தை பிரபலப்படுத்தி வருகின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர். அது மட்டும் இல்லாமல் பொதுமக்களுக்கு விசில் வழங்குவது, சுவர் ஓவியங்கள் என சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க அந்தக் கட்சியினர் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
இந்த நிலையில் தான் ஒரு அரசியல் கட்சியின் சின்னம் என்பதாலேயே தேர்தல் அதிகாரி அந்த விசிலை பிடுங்கினார் என ஒரு தரப்பும், விஜய்க்கு பயந்து கொண்டு அரசே செயல்படுகிறது என மற்றொரு தரப்பு கூறி வருகின்றனர். இந்த நிலையில் மாணவியின் வாயிலிருந்த விசிலை தேர்தல் அதிகாரி பறித்து விட்டார் அரசு பேருந்து சென்றால் கண்டக்டர் வாயில் விசில் வைத்திருப்பாரே? அதை என்ன செய்வார் என கேள்வி கேட்கின்றனர் தவெக ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications