முன்னாள் அதிமுக எம்பி கேசி பழனிச்சாமி கைது செய்யப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்கள்
கோவை: முன்னாள் அதிமுக எம்பி கேசி பழனிச்சாமி கைது செய்யப்பட்டது ஏன் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கே சி பழனிச்சாமி கோவையிலுள்ள லாலிரோட்டில் வசித்து வருகிறார். கோவையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றை நடத்தி வரும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
கடந்த மார்ச் மாதம் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற கே சி பழனிச்சாமி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கோரினார். அவ்வாறு அமைக்கவில்லை என்றால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களே அதிமுகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என கூறினார்.
முன்னாள் அதிமுக எம்பி பழனிச்சாமி கைது.. கோவையில் அதிகாலையில் பரபரப்பு
நீக்கம்
இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்து கேசி பழனிச்சாமியை கட்சியிலிருந்து நீக்கினர். இவர் அதிமுகவிலிருந்து நீக்கிய பிறகும் போலி இணையதளம் ஒன்றை துவக்கி அதில் அதிமுக குறித்து பதிவிட்டு வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
விசாரணை
இவரது இணையதளத்திலும் லெட்டர் பேடிலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தியிருந்தார். இந்நிலையில் நேற்று முட்டுகவுண்டன் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கந்தவேல் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சூலூர் போலீஸார் இன்று காலை 4 மணி அளவில் கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள கே சி பழனிச்சாமியை அவரது வீட்டில் வைத்து விசாரணை நடத்தினர்.
11 பிரிவுகள்
சுமார் ஒரு மணிநேரம் நடந்த விசாரணைக்குப் பிறகு கே சி பழனிச்சாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஏமாற்றுதல் நம்பியோர் மீது ஏமாற்றுதல், ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், தவறான ஆவணத்தை உருவாக்குதல், பொய்யான இணையதளம் உருவாக்கி ஏமாற்றுதல், ஏமாற்ற திட்டமிட்டு ஆவணம் உருவாக்குதல், சொத்து குறியீட்டை தவறாக பயன்படுத்துதல், தவறான சொத்து குறியீட்டைப் பயன்படுத்த சொத்து குறியீட்டை தவறாக பயன்படுத்தியது, தண்டனை சொத்து அடையாளத்தை உருவாக்கும் கருவியை வைத்திருத்தல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய பிரிவு உள்ளிட்ட 11 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மீண்டும் அதிமுகவில்
இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட பிறகும் தற்போது சூலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரை கைது செய்த போது போலீஸாருடன் கேசி பழனிச்சாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதிமுகவில் மீண்டும் இணைந்து கொண்டதாக கேசி பழனிச்சாமி கூறிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.