கோவையில் ஒரே நாளில் 2 இடங்களில வந்த காட்டு யானைகள்.. ஐஸ்ட் மிஸ்ஸில் நடந்த எஸ்கேப்
கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த தேவராயபுரம் பகுதியில் நேற்று காட்டு யானை ஒன்று புகுந்தது. இதையறிந்து போளுவாம் பட்டி வனத்துறையினர் விரைந்து வந்து காட்டுயானையை விரட்டி சென்ற போது, வனத்துறை வாகனத்தை காட்டு யானை சேதப்படுத்தியது. இதேபோல் கோவை வெள்ளியங்கிரி கோவிலுக்கு வந்த மற்றொரு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே நாளில் இரண்டு காட்டு யானைகள் கோவை அருகே அட்டகாசம் செய்திருக்கின்றன.
கோவை தொண்டாமுத்தூர், வெள்ளியங்கிரி, மருதமலை மற்றும் அதன்சுற்றுவட்டாரத்தில் உள்ள மலை அடிவாரப்பகுதிகளில் அடிக்கடி காட்டுயானைகள் தரையிறங்கும். உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் அதிகமாக காட்டுயானைகள் வருகின்றன. முன்பைவிட தற்போது அதிக அளவில் காட்டு யானைகள் ஊருக்குள் வருகின்றன.

அந்த வகையில் கோவை தொண்டாமுத்தூரை அடுத்த தேவராயபுரம் பகுதியில் நேற்று காட்டு யானை ஒன்று வந்தது. இது குறித்து தகவல் அறிந்து போளுவாம் பட்டி வனத்துறையினர் விரைந்து வந்து காட்டுயானையை கண்காணித்தார்கள். பின்னர் அவர்கள், அங்குள்ள மகாலட்சுமி கோவிலுக்கு செல்லும் பாதை வழியாக ஜீப்பில் சென்று காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதியை நோக்கி விரட்டி சென்றார்கள்.
அப்போது காட்டு யானை திடீரென்று திரும்பி வனத்துறை வாகனத்தை நோக்கி ஆவேசமாக வந்தது. இதனால் அவர்கள் வாகனத்தை நிறுத்தினர். இதற்கிடையே அந்த யானை ஆக்ரோஷமாக பிளிறியபடி வந்து துதிக்கையால் வனத்துறை வாகனத்தை பலமாக தாக்கியது.
இதில் அந்த ஜீப்பின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனால் அந்த வாகனத்தில் இருந்த வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் சுதாரித்துக் கொண்டு வாகனத்தை பின்னோக்கி இயக்கியதால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர். வனத்துறை வாகனத்தை, காட்டுயானை தாக்கி சேதப்படுத்தும் காட்சியை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில்
கோவை மாவட்டம் பூண்டி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத் தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை ஒன்று வெள்ளியங்கிரி கோவில் மைதானத்திற்கு ஓடி வந்தது. அதை பார்த்து அங்கிருந்த பக்தர்கள் தப்பித்து ஓடினார்கள்.
இதையடுத்து காட்டுயானை கோவில் அலுவலகம் அருகே நின்றது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவில் ஊழியர்கள் வெளியே வர முடியாமல் தவித்தார்கள். இதனால் அங்க பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து நீண்டபோராட்டத்திற்கு பிறகு காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர் இதனால் பக்தர்கள், கோவில் அலுவலக ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர். கோவில் அலுவலகம் அருகே காட்டு யானை நின்றதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அது சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications