மீண்டும் திமுக ஆட்சி அமைத்தால் உதயநிதி ஸ்டாலின் முதல்வரா? மத்திய அமைச்சருக்கு செந்தில் பாலாஜி விளக்கம்
கோவை: மீண்டும் திமுக ஆட்சி அமைத்தால் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவார்கள் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்த கருத்து தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, எங்களுடைய முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் தான். துணை முதலமைச்சர் எங்களுடைய அண்ணன் உதயநிதி தான்.. எனவே எங்களுடைய முதலமைச்சர், துணை முதலமைச்சர் பற்றி இன்னொருவர் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மரக்கடை பகுதியில் அண்மையில் பரப்புரை மேற்கொண்டு வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செந்தில் பாலாஜி பேசுகையில், " அனைத்து வார்டுகளுக்கும் அனைத்து தெருக்கள் மற்றும் இல்லங்களுக்கு நேரடியாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் முதல் சுற்று பயணத்தை நிறைவு செய்தேன் அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையும் அதேபோன்று ஒவ்வொரு வாக்காளர்களையும் நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ளேன்.

கோவை தெற்கு தொகுதியை பொருத்தவரை நாங்கள் செல்லும் இடங்களில் முதல்வருக்கு மகத்தான வரவேற்பை பொதுமக்கள் வழங்கி வருகிறார்கள். அவர்களது வாக்கு உதயசூரியனுக்கு என்பதை உறுதி செய்துள்ளார்கள். எங்களுக்கு தரக்கூடிய வரவேற்பு என்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தரக்கூடிய ஆதரவு. எனவே வெற்றி பயணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்" என்றார்.
மீண்டும் திமுக ஆட்சி அமைத்தால் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவார்கள் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்த கருத்து தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, "எங்களுடைய முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் தான். துணை முதலமைச்சர் எங்களுடைய அண்ணன் உதயநிதி தான்..எனவே எங்களுடைய முதலமைச்சர், துணை முதலமைச்சர் பற்றி இன்னொருவர் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஒரு இயக்கத்தில் முதலமைச்சரை தேர்ந்தெடுப்பது என்பது சட்டமன்ற உறுப்பினர்களின் கடமை. அதன்படி இரண்டாவது முறையாகவும் தளபதியை தேர்ந்தெடுத்து ஆட்சி கட்டிலில் அமர்த்துவதற்கு தயாராகி வருகிறோம்.
குற்றச்சாட்டை முன்வைக்கும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், கோவைக்கு வருகின்ற பொழுது பாஜக அரசாங்கம் அமைந்து இத்தனை ஆண்டுகளில் கோவை மாவட்டத்திற்கு ஒன்றிய அரசு திட்டங்களின் கீழ் இத்தனை திட்டங்களை செய்துள்ளோம்.. இத்தனை நிதிகளை கோவை மாவட்டத்திற்கு கொடுத்துள்ளோம்.. என்று சொல்லிவிட்டு வாக்கு சேகரித்தால் சரியான சூழலாக வாக்கு சேகரிப்பதற்கு அமையும் .. எதையும் செய்யாதவர்கள் அரசின் மீது குற்றச்சாட்டு வைப்பது, துணை முதலமைச்சர் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக குற்றங்களை சுமத்துவதால் நாங்கள் கவலை கொள்வதில்லை.
ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கை 11.19 அடைந்த ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் . இதையெல்லாம் தெரிந்த பிறகும் இரட்டை எஞ்சின் சர்க்கார் என்றால் என்ன.. எடப்பாடியார் ஆட்சியிலும் அதுதான் இருந்தது.. அப்பொழுது என்ன வளர்ச்சி அடைந்தது என கேள்வி எழுப்பினார். பாண்டிச்சேரியிலும் இரண்டு அரசாங்கமும் ஒன்றாக தான் இருந்தனர்.. அங்கு என்ன வளர்ச்சி அடைந்தது.
பாஜக அரசு தமிழகத்திற்கு எந்த நிதியையும் ஒழுங்காக வழங்கவில்லை. கட்டுகின்ற வரியைக் காட்டிலும் குறைவாக தான் திருப்பி தருகிறார்கள். ஒன்றிய அரசு எந்த நிதியை தமிழகத்திற்கு அளித்தது எதனை சரியாக பயன்படுத்தவில்லை என்று கூறினால் ஏற்புடையதாக இருக்கும். இதை விட்டுவிட்டு நிதியை கொடுத்தும் சரியாக பயன்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டுவது ஏற்புடையது அல்ல . கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு மாநில அரசு நிதியை ஒதுக்கி நிலங்களை பெற்றுக் கொடுத்தது. ஆனால் தற்பொழுது வர எந்த ஒரு பணிகளையும் ஒன்றிய அரசால் முன்னெடுக்கப்படவில்லை . கோவை மெட்ரோவிற்கு ஆவணங்கள் சரியாக இல்லை என்றால், என்னென்ன தவறுகள் உள்ளது என்பது குறித்து எடுத்துரைக்க வேண்டும்.. அதை விட்டுவிட்டு ஏன் நிராகரிக்க வேண்டும் ..
தமிழ்நாடு மக்களுக்கு பாஜக ஒன்றே ஒன்றைத்தான் செய்யும்.. தேர்தல் வரும் பொழுது இரண்டொரு வார்த்தைகள் மட்டும் தமிழில் பேசுவார்கள்.. அதன் பிறகு அதனை மறந்து விடுவார்கள். தமிழக மக்களுக்காக நெஞ்சுரத்தோடு உழைக்கக்கூடிய ஒரு முதலமைச்சரை நாம் பெற்றுள்ளோம் இரண்டாவது முறையாக அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெறும்..கோவையில் 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்" என்றார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் வரை நாள்தோறும் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என்று அண்ணாமலை மற்றும் பியூஸ் கோயல் தெரிவித்திருப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, ஏற்கனவே மாநில பொறுப்பில் இருந்த அவர்(அண்ணாமலை) வாரத்திற்கு ஒருமுறை, செய்தியாளர்களை சந்தித்தாரா, மாதத்திற்கு ஒருமுறை செய்தியாளர்களை சந்தித்தாரா ஆறு மாதத்திற்கு ஒருமுறை செய்தியாளர்களை சந்தித்தாரா என்று கேள்வி எழுப்பி தற்பொழுது மட்டும் தினமும் செய்தியாளர்களை சந்திக்கப் போகிறார். அறிவாலயத்தில் அடி செங்கல் வரை உருவுவேன் என்று அவர் கூறினார்.. தற்பொழுது அவருடைய செங்கல் உருவி கிடக்கிறது முதலில் அவரை ட்ரவுசர் போட்டுக் கொண்டு வேலை செய்ய சொல்லுங்கள் என கூறினார்.












Click it and Unblock the Notifications