தொகுதி மாறும் வானதி சீனிவாசன்.. செய்தியாளர் கேள்விக்கு சூசக பதில்
கோவை: தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் பரபரப்பான வியூகங்களுடன் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக கூட்டணியும் முட்டி மோதி வருகின்றன. பொங்கல் பண்டிகையும் அரசியலாகியுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட உள்ளதால் பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் அங்கு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலாண்டிபாளையம் பகுதியில் பா.ஜ.க. சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாமரை கோல திருவிழா என்ற பெயரில் கோலப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதனைப் பார்வையிட்ட பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் பொங்கலை ஒட்டி தாமரைப் போல திருவிழா நடத்தப்படுகிறது. இன்று கோவையில் மகளிர் அணி துவங்கியிருக்கிறது. வரும் ஒரு வாரகாலம் தமிழகம் முழுவதும் தாமரையை கோலமாக வரைந்து, பிரதமரின் திட்டங்களையும் உரையாடும் நிகழ்வாக நடத்துகிறோம்
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பணிகளை ஆரம்பித்து விட்டீர்களா? என்ற கேள்விக்கு, நான் பொங்கல் விழாவில் கலந்துகொள்ள வந்திருக்கிறேன். கட்சியின் மகளிர் அணி எல்லா இடத்திலும் இருக்கிறது. உங்கள் யூகத்துக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது. வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ வேறு வேலையாக சென்றிருப்பதால் அவர் வரவில்லை. அவர் சார்பாக அதிமுகவினர் வந்திருக்கின்றனர்.
ஜனநாயகன் படத்தில் பிரதமர் தலையீடு இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருப்பது குறித்த கேள்விக்கு, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒரிஜினல் பராசக்தி திரைப்படம் வந்தது. கலைஞர் வசனத்தில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி நடித்திருந்தார். அந்த திரைப்படத்திற்கு இரண்டு நாட்கள் மவுண்ட் ரோட்டில் உள்ள திரையரங்கில் சென்சார் செய்து 130 கட் கொடுத்தார்கள்.
அப்படிப்பட்ட பாரம்பரியத்தை வைத்திருக்கும் ராகுல் காந்தி, எமர்ஜென்சியை கொண்டு வந்து குரல்வளையை நெரித்த கட்சியின் ராகுல் காந்தி ஜனநாயகன் படத்தை பேசுகின்றார். ஜனநாயகன் படத்திற்கு கட் கொடுத்திருக்கின்றனர். இது நீதிமன்றத்தின் கையில் இருக்கிறது என தெரிந்தும் வேண்டுமென்று ஏதாவது ஒரு வழியில் பிஜேபியை குறை சொல்ல வேண்டும் என ராகுல்காந்தி கருத்து சொல்லியிருக்கிறார்.
கூட்டணி அமைந்தாகிவிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கூடுதல் கட்சிகள் வந்து கொண்டே இருக்கிறார்கள். வரும் 23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற உள்ளது. அதற்குப் பின்பாக இன்னும் கூட்டணிக்கு பலர் வருவார்கள். பா.ஜ.க தலைவர்கள் அனைவரும் தேசிய தலைவர் வந்த பொழுதே பேசியிருக்கிறோம்.
டெல்லியில் எல்லோரும் நாளை சந்திக்க போகிறோம். இது எல்லாம் தொடர்ச்சியான ஒரு நடைமுறைதான். ஒவ்வொரு நாளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கிறோம். கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வானதி சீனிவாசன் இருந்து வரும் நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட உள்ளதால் அவர் அங்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் என்று
கூறப்படுகிறது.
சமீபகாலமாக அடுத்தடுத்து கோவை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாஜக சார்ந்த நிகழ்வுகள் அதிகளவில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications