"அந்த மனசுதான் சார் கடவுள்".. சாலை அமைக்க 32 கோடி ரூபாய் நிலத்தை தானமாக வழங்கிய பொள்ளாச்சி பெண்
கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சியில் இணைப்புத் திட்ட சாலை அமைக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரூ. 32 கோடி மதிப்பிலான 80 சென்ட் நிலத்தை, நகராட்சி நிர்வாகத்திடம் சாந்தா என்ற பெண் தானமாக வழங்கியுள்ளார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சியில் பொள்ளாச்சி - பல்லடம் சாலை - சின்னாம்பாளையம் சாலையை இணைக்கும் 66 அடி இணைப்புச் சாலை அமைக்கும் பணி 1968 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கடந்த 2009 ஆம் ஆண்டில் நகராட்சி நிர்வாகம் பணிகளை மேற்கொண்டு வந்தது. அப்பகுதியில் இருந்த நிலங்களை கையகப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வந்தன.

இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த நிலத்தின் உரிமையாளரான சாந்தா என்ற பெண்ணிடம், நகராட்சி ஆணையர் கணேசன் பேச்சுவார்த்தை நடத்தி, இணைப்புச் சாலை அமைப்பதற்கான நிலத்தை வழங்க கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, சாந்தா தனது 80 சென்ட் நிலத்தை தானமாக வழங்க முடிவு செய்து, நகராட்சி ஆணையர் கணேசன் உள்ளிட்டோரிடம் நிலத்தை தானமாக வழங்கினார். சாந்தா தானமாக வழங்கி 80 சென்ட் நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ. 32 கோடியாகும்.
இதுகுறித்து சாந்தா கூறியதாவது: எனது கணவரின் பூர்வீகச் சொத்து பல்லடம் சாலையில் உள்ளது. அங்கு மண்டபம் கட்டப்பட்டது. அப்பகுதியில் சாலை அமைக்க கடந்த 2019 ஆம் ஆண்டில் நகராட்சி நிர்வாகத்தினர் நிலம் கேட்டனர். அப்போது விருப்பம் இல்லை என்று கூறியதால், எங்களுக்கான சொத்து வரியை உயர்த்தினர். இதனை எதிர்த்து எனது கணவர் ஜெயராம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த நிலப் பிரச்சனை, வரி உயர்வு காரணத்தால் நகராட்சிக்கும், எங்களுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில், நகராட்சி ஆணையர் கணேசன் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 49 லட்சம் வரி செலுத்த உத்தரவிட்டார். இதனால், மகிழ்ச்சி மற்றும் மன நிறைவடைந்ததால், ரூ. 32 கோடி மதிப்பிலான நிலத்தை சாலை அமைக்க தானமாக வழங்க முடிவு செய்தேன்.
நிலம் வழங்குவது தொடர்பாக என்னுடைய மகன், மகளிடம் பேசி கலந்தாலோசித்தேன். எனது 40 சென்ட், மகன் மகளின் 40 சென்ட் என மொத்தம் 80 சென்ட் தானமாக கொடுத்துள்ளோம். நீதிமன்றத்திலும் எங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்துவிட்டது. தற்போது அந்த வழக்குகளை திரும்பப் பெறவுள்ளோம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications