கோவை இருகூரில் இளம் பெண் காரில் வலுக்கட்டாயமாக கடத்தல்? அரசுக்கு டிடிவி தினகரன் முக்கிய கோரிக்கை
கோவை: கோவை ஒண்டிபுதூர் அடுத்த இருகூர் பகுதியில் இளம்பெண் ஒருவரை சிலர் மிரட்டி வலுகட்டாயமாக காருக்குள் ஏற்றி சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோவையில் இளம்பெண் கடத்தப்படுவது போல வெளியாகியிருக்கும் சிசிடிவி காட்சிகள் - தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை ஒண்டிபுதூர் அடுத்த இருகூர் பகுதியில் இளம்பெண் ஒருவரை சிலர் மிரட்டி வலுகட்டாயமாக காருக்குள் ஏற்றி சென்றதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் சிசிடிவி காட்சிகளை கைபற்றி ஆய்வு செய்தனர். இருகூர் அடுத்த தீபம் நகரில் நின்று கொண்டிருந்த காரில் வந்த மூன்று பேர் பேருந்துக்காக காத்திருந்த இளம் பெண்ணை தாக்கியதோடு, அவரை இழுத்து காருக்குள் ஏற்றி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து கார் ஏஜி புதூர் பகுதியை கடந்து இருகூர் நோக்கி சென்றதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. சிசிடிவி காட்சியின் அடிப்படையில் மூவரின் அடையாளங்களை வைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், "கோவையில் இளம்பெண் கடத்தப்படுவது போல வெளியாகியிருக்கும் சிசிடிவி காட்சிகள் - தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
கோவை மாவட்டம் இருகூர் தீபம் நகர் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவரை அடையாளம் தெரியாத கும்பல் தாக்கி வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் செல்வது போல வெளியாகியிருக்கும் சிசிடிவி காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன.
கோவை சர்வதேச விமான நிலையம் அருகே ஆண்நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தியின் அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே மீண்டும் ஒரு இளம்பெண் கடத்தப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகார் பெண்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
பிரதான சாலையில் நடந்து கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டிருக்கும் செய்தி, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை அடியோடு கேள்விக்குறியாக்கியிருப்பதோடு, காவல்துறை என்று ஒன்று உள்ளதா ? என்ற கேள்வியைப் பொதுமக்கள் அனைவரின் மத்தியிலும் எழுப்பியுள்ளது.
எனவே, இளம்பெண் கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகாரைத் தீவிரமாக விசாரித்து தொடர்புடையவர்களைக் கைது செய்து கடுமையான தண்டனை வழங்குவதோடு, காவல்துறையின் ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications