புரியுதா.. என்னை கலெக்டர் தான் கேள்வி கேட்கணும்.. நீ கேட்க கூடாது.. இன்ஸ்பெக்டரை மிரட்டிய இஸ்மாயில்
சப் இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்
கோவை: "என்னை விசாரிக்க நீ யார்.. நான் ஹெல்மெட் போட்டால் உனக்கென்ன, போடாட்டி உனக்கென்ன.. கலெக்டர் மட்டும்தான் என்னை கேள்வி கேட்கணும்" என்று போலீஸ்காரருக்கே கொலை மிரட்டல் விடுத்த இஸ்மாயில் என்பவரை அலேக்காக தூக்கி உள்ளே போட்டுவிட்டது காவல்துறை!
விபத்துகளை தடுக்க போலீசார் தமிழகமெங்கும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.. அந்த வகையில், கோவை உக்கடம் பைபாஸ் ரோட்டிலும் கண்காணிப்பு நடந்து வருகிறது.
கடந்த 17-ந் தேதி உக்கடம் போலீஸ் சிறப்பு எஸ்ஐ முருகவேல் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.. அவருடன் சக காவலர்களும் பணியில் இருந்தனர்.
விசாரணை
அப்போது, ஒரு பைக் வேகமாக வந்தது.. அதில் வந்தவர் ஹெல்மட்டும் போடவில்லை.. அதனால் அவரை முருகவேல் தடுத்து நிறுத்தினார்.. மேலும் அபராதமும் விதித்தார். ஃபைன் போடுவதை பார்த்த அந்த நபருக்கு கோபம் வந்துவிட்டது.. "என்னை விசாரிக்க நீ யார்? ஹெல்மெட் போடாமல் வந்தால், என்னை கலெக்டர் மட்டும்தான் விசாரிக்கணும்" என்று சப் இன்ஸ்பெக்டர் முருகவேலுடன் வாக்குவாதத்தில் இறங்கினார்.
அபராதம்
கொஞ்ச நேரத்தில் தகாத வார்த்தையிலும் பேச ஆரம்பித்து, கடைசியில் கொலை செய்துவிடுவேன் என்ற மிரட்டலும் விடுத்தார். இந்த சம்பவத்தை சப்-இன்ஸ்பெக்டர் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்தார். உடனே அந்த நபரும், பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்து, சப் இன்ஸ்பெக்டரை வீடியோ எடுத்தார்.
இஸ்மாயில்
இவ்வளவு நடந்த பிறகும் அந்த நபர் ஃபைன் கட்டாமல் பைக்கில் கிளம்பி போய்விட்டார். இது குறித்த புகாரின் பேரில் உக்கடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த நபரின் பெயர் இஸ்மாயில் என்பதும் வயது 32 என்பதும் தெரியவந்தது.. தெற்கு உக்கடம் ஜிஎம் நகரை சேர்ந்தவராம்.
விடியோ வைரல்
இதையடுத்து தகாத வார்த்தைகளால் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து இஸ்மாயிலை போலீசார் கைது செய்தனர். ஹெல்மெட் போடாமல் வந்ததுடன், போலீஸ்காரருக்கே கொலை மிரட்டல் விடுத்து இஸ்மாயில் தகராறு செய்தது.. சோஷியில் மீடியாவில் வைரலாகி வருகிறது.