இலங்கை விவகாரம்.. அடுத்த 2 நாட்கள் ரொம்ப முக்கியம்! ஏன் தெரியுமா? பரபரக்கும் ராஜபக்ச அரசு
கொழும்பு: மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவிக்கும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் முக்கிய முடிவை எடுத்துள்ளது.
இலங்கை நாட்டில் கடந்த ஆண்டு முதலே பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றால் சுற்றுலாத் துறை முடங்கியது தொடங்கி இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.
இந்த பொருளாதார நெருக்கடி கடந்த சில நாட்களாக மிக மோசமாக மாறி வருகிறது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

இலங்கை
பல்வேறு காரணங்களால் இலங்கை நாட்டின் அந்நிய செலாவணி மிக மோசமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக இலங்கையில் அத்தியாவசிய பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல அங்குப் பல பகுதிகளில் மோசமான எரிபொருள் பற்றாக்குறையும் மின் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் பல பகுதிகளில் 13 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை மின்வெட்டும் ஏற்பட்டுள்ளது.

உதவி
எரிபொருள் பற்றாக்குறையைச் சமாளிக்க அந்நாட்டிற்கு உதவும் வகையில் இந்தியா 40 ஆயிரம் டன் டீசலை அனுப்பி இருந்தது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இலங்கைக்கு உதவும் நிலையிலும், அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. இலங்கையில் ஒவ்வொரு நாளும் நிலைமை தொடர்ந்து மோசமாகிக் கொண்டே செல்வதால், பொதுமக்கள் அனைவரும் அந்நாட்டு அரசுக்கு எதிராகத் திரும்பி உள்ளனர்.

போராட்டம்
இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நேற்று முன்தினம் இலங்கையில் உள்ள 32 அமைச்சர்களும் கூண்டோடு பதவி விலகினர். இதையடுத்து 4 பேர் கொண்ட புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்டது. அதில் நிதி அமைச்சராகப் பதவியேற்ற அலி சப்ரி இன்று பதவி விலகினார். அமைச்சர் ஒருவர் 24 மணி நேரத்திற்குள் பதவி விலகும் அளவுக்கு அங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது.

2 நாட்கள் விவாதம்
இதையடுத்து இலங்கையில் இன்று பிற்பகல் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் சூழல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை இலங்கை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். அதன்படி நாளையும், நாளை மறுநாளும் இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது.

கூட்டணி கட்சிகள்
இலங்கையில் ஆளும் மகிந்தா ராஜபக்ச அரசுக்கான ஆதரவைக் கூட்டணிக் கட்சிகள் விலக்கிக் கொண்டு வரும் நிலையில், ராஜபக்ச அரசு பெரும்பான்மை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தான் பொருளாதார நெருக்கடி தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் 2 நாட்கள் விவாதம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications