பொருளாதார நெருக்கடிக்கு காரணம்: நடவடிக்கை எடுக்க இலங்கை கோர்ட்டு அனுமதி.. சிக்குவாரா ராஜபக்சே
கொழும்பு: இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக இருந்ததாக கூறப்படும் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே உள்பட 32 பேர் மீது நடவடிக்கை எடுக்க இலங்கை உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று இலங்கை. நான்கு புறமும் கடல் சூழ்ந்த அழகிய தீவு தேசமான உள்ள இலங்கை மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை இன்று அந்த நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
அன்னிய செலவாணி பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை தவித்து வருகிறது.
ஆப்கானிஸ்தான் டூ இலங்கை.. ரூ.1,200 கோடி ஹெராயின்.. சினிமா பாணியில் சுத்துபோட்ட இந்திய அதிகாரிகள்
தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே
பெட்ரோல், டீசல் உள்பட மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவியது. இதனால், மக்கள் வெகுண்டெழுந்தனர். தங்களின் இந்த நிலைமைக்கு ஆட்சி அதிகாரத்தை தன்னிடம் வைத்திருந்த ராஜபக்சே சகோதர்களே காரணம் என நினைத்து அவர்களுக்கு எதிராக கடும் போரட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்தில் வன்முறை வெடித்து இலங்கை பற்றி எரிந்தது. மக்களின் போராட்டத்துக்கு அஞ்சி முதலில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார்.
ரணில் விக்ரமசிங்கே பதவியேற்பு
ஆனால், அதிபர் பதவியில் இருந்து முதலில் விலக மறுத்து அடம் பிடித்த கோத்தபய ராஜபக்சே, மக்கள் அதிபர் மாளிகையை சுற்றிவளைத்ததால், வேறு வழியின்றி தப்பி ஓட்டம் பிடித்தார். இதையடுத்து தற்போது இலங்கை அதிபராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே இலங்கையில் பொருளாதார நிலையை சீர் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் இலங்கையில் பொருளாதார நிலை அப்படியே தான் உள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இதற்கிடையே நாட்டின் இந்த கடும் பொருளாதார நெருக்கடிக்கு கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே உள்பட மேலும் 37 பேர் மீது நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், தவறான பொருளாதார மேலாண்மைகளை கையாண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இது தொடர்பாக டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா என்ற அமைப்பும், இலங்கை வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் சந்திர ஜெயரத்னே உள்பட சிலர் இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அடுத்த மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மற்றும் 37 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்தது. மேலும், சர்வதேச நிதியத்தில் நிதி (ஐஎம்எப்) உதவி கோரியதில் ஏற்பட்ட தாமதம், அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை மதிப்பை ரூபாய் 203 என நிர்ணயித்த இலங்கை நிதி ஆணையத்தின் முடிவு உள்ளிட்டவை குறித்து கணக்கு தணிக்கை செய்து செப்டம்பர் 3-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.