இலங்கை: மன்னார் அருகே வாக்காளர் பேருந்து மீது துப்பாக்கிச் சூடு- மரங்களை வெட்டி தடை- பதற்றம்!
Recommended Video
கொழும்பு: இலங்கையில் மன்னார் அருகே வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இலங்கையில் 8-ஆவது அதிபர் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. பலத்த பாதுகாப்புகளுடன் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
மொத்தம் 12,845 வாக்குச் சாவடிகளில் வாக்களித்து வருகின்றனர். மொத்தம் 1.6 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக வாக்காளர்கள் பேருந்துகளின் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.
அதிபர் தேர்தல்: இலங்கை வரலாற்றில் முதல்முறையாக மாறுபட்ட வாக்குச் சீட்டு..வாக்களிப்பது எப்படி?
அது போல் புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு வாக்காளர்களை ஏற்றிக் கொண்டு நெச்சியகாம ஒயாமடு சாலையில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து மீது அனுராதபுரம் தந்திரிமலைப் பகுதியில் அப்பேருந்து மீது மர்ம நபர்கள் கற்களை வீசித் தாக்கினர். பின்னர் துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.
ஆனால் எந்த சேதமும் ஏற்படவில்லை. இதனையடுத்து பேருந்தை ஓட்டுநர் செட்டிகுளம் காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றார்.
இப்பேருந்துக்குப் பின்னால் வந்த பேருந்துகளையும் தடுக்கும் வகையில் மரங்களை வெட்டி தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இது தொடர்பாக சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த இடத்துக்கு வந்த போலீசார் பொதுமக்களின் உதவியோடு மரங்களை அகற்றி மன்னார் பிரதான சாலைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவங்களால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.