இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபாயவை ஆகஸ்ட்டில் வேட்பாளராக அறிவிக்கும் ராஜபக்சே!
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தமது சகோதரர் கோத்தபாய ராஜபக்சேவை வரும் ஆகஸ்ட் மாதம் வேட்பாளராக அறிவிக்க இருக்கிறார் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே. சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கோத்தபாய களமிறங்குகிறார்.
இலங்கையில் இந்த ஆண்டின் இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் போட்டியிடுவாரா? என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
அதேநேரத்தில் தற்போதைய அமைச்சர் விஜித சேனாரத்ன தாம் அதிபர் தேர்தலில் போட்டியிட தயார் என அறிவித்திருக்கிறார். இதனிடையே சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் கோத்தபாய ராஜபக்சே வேட்பாளராக களம் இறங்க உள்ளார்.

பெரமுனவின் தலைவராக மகிந்த
இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவனராக பசில் ராஜபக்சே இருந்து வருகிறார். இக்கட்சியின் தலைவராக மகிந்த ராஜபக்சே வரும் ஆகஸ்ட் 11-ந் தேதி பொறுப்பேற்கிறார்

கோத்தபாய வேட்பாளர்
இதனைத் தொடர்ந்து முன்னாள் பாதுகாப்பு துறை செயலாளரும் தமது சகோதரருமான கோத்தபாய ராஜபக்சேவை பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சே அறிவிக்க உள்ளார். 2009-ம் ஆண்டு யுத்தத்துக்குப் பின்னர் இலங்கை அதிபர் தேர்தலை தீர்மானிக்கும் சக்திகளாக இந்தியா, சீனா இருந்து வருகின்றன.

ஆடுபுலி ஆட்டம்
சீனா சார்பு மகிந்த ராஜபக்சேவை வீழ்த்தி இந்திய சார்பு மைத்திரிபால சிறிசேன அதிபராக்கப்பட்டார். ஆனால் மைத்திரிபாலவும் சீனா பக்கம் சாய்ந்து இருக்கிறார். இதனால் மீண்டும் ராஜபக்சே குடும்பத்தையே இந்தியா ஆதரித்து வருகிறது.

மோடி- மகிந்த சந்திப்பு
இதனை பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்டுகளில் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். அத்துடன் 2-வது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்ற மோடி குறுகிய கால பயணமாக இலங்கை சென்ற போது மகிந்த ராஜபக்சே குடும்பத்தினரை சந்தித்தும் பேசியிருந்தார்.

கோத்தபாய மீது புகார்
அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதல்கள், அதிபர் சிறிசேனாவின் ஆட்சி மீது வெறுப்பை ஏற்படுத்த ராஜபக்சே குடும்பத்தினரால் நடத்தப்பட்டது என்பது பரவலான குற்றச்சாட்டு. தற்கொலைப்படை தீவிரவாதிகளின் பின்னணியில் கோத்தபாய ராஜபக்சே இருக்கிறார் எனவும் அமைச்சர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கோத்தபாய, அதிபர் வேட்பாளராக களமிறங்குவது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications