இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே நாளை ராஜினாமா? நாடாளுமன்றத்தில் அறிவிப்பு?
கொழும்பு: இலங்கையில் அதி உச்சத்தை எட்டியுள்ள பொருளாதார நெருக்கடிகள், மக்கள் கிளர்ச்சிகளை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ந்நாளை பதவி விலகக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சே சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
இலங்கை அரசாங்கத்தின் அபரிதமான வெளிநாட்டு கடன்கள், கொரோனா கால பொருளாதார நெருக்கடி ஆகியவை அந்த நாட்டையே சீரழித்துவிட்டது. இலங்கையில் அத்தியாவசியப் பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்தும் தட்டுப்பாடும் நிலவுகிறது. ஆகையால் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும் என்பது அந்நாட்டு மக்களின் கோரிக்கை.

இதனை வலியுறுத்தி இலங்கையின் அனைத்து பகுதிகளும் போர்க்களமாகி இருக்கின்றன. தலைநகர் கொழும்பு காலிமுகத்திடலில் கடந்த் 25 நாட்களாக இரவும் பகலுமாக பொதுமக்கள் அதே இடத்தில் முற்றுகையிட்டு இடைவிடாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை போலீசை ஏவி ஒடுக்க முயற்சித்தது ராஜபக்சேக்கள் அரசாங்கம். ஆனால் இதனை பொதுமக்கள் முறியடித்து போலீசாரை ஓடஓடவிரட்டியடித்தனர்.
இதனிடையே தமது பதவியை மட்டும் காப்பாற்றிக் கொண்டு அண்ணன் ராஜபக்சேவை பலிகடாவாக்குவதில் கோத்தபாய ராஜபக்சே படுமுனைப்பாக இருந்து வருகிறார். இது தொடர்பான அரணமனை சதி ஆலோசனைகளையும் கோத்தாபய மேற்கொண்டும் வருகிறார். மகிந்த ராஜபக்சேவை பதவியில் இருந்து விரட்டிவிட்டு இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது என்பது கோத்தபாயவின் திட்டம்.
இந்நிலையில்தான் இலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுகிறது. இந்த கூட்டத்தில் மகிந்த ராஜபக்சே சிறப்பு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய அனுமதி கோரியிருக்கிறார். இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே நாளை ராஜினாமா செய்வார்; அது தொடர்பான அறிக்கையைத்தான் நாளை நாடாளுமன்றத்தில் அவர் தாக்கல் செய்ய உள்ளார் என்கின்றன கொழும்பு வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications