இலங்கை அரசியலில் அதிரடி திருப்பம்... பிரதமரானார் ராஜபக்சே!
Recommended Video
கொழும்பு : இலங்கையின் பிரதமராக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ளார். ரணில் விக்ரமசிங்கே கட்சியுடனான கூட்டணியில் இருந்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா விலகியதையடுத்து இந்த அதிரடி மாற்றம் நடந்துள்ளது.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணியில் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி இடம்பெற்றிருந்தது. 2015 பொதுத் தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை நடத்தி வந்தது. கூட்டணியில் சமீபகாலமாக சலசலப்பு ஏற்பட்டு வந்தது. பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் இரு கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவியது.
இரண்டு கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாததால் பெரும்பாலான இடங்களை இழந்தனர். இதனால் உள்ளாட்சித் தேர்தலில் ராஜபக்சே கட்சி அமோக வெற்றி கண்டது. இலங்கையில் கலவரம் ஏற்பட்டதற்கு பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே சட்டம் ஒழுங்கை சரிவர கையாளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனையடுத்து அதிபர் மைத்திரிபால சிறிசேனாவிற்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது.
இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார. ரணில் விக்ரமசிங்கே கட்சியுடனான கூட்டணியில் இருந்து விலகி ராஜபக்சே கட்சியுடன் சிறிசேனா கூட்டணி அமைத்துள்ளார். இதனையடுத்து புதிய பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச பதவியேற்றுள்ளார். இலங்கையின் 11வது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷேவிற்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.