இலங்கையில் ராஜபக்ச மகன் கைது.. சொத்து குவிப்பு வழக்கில் அதிரடி நடவடிக்கை
கொழும்பு: இலங்கையில் முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் மீது பதியப்பட்ட ஊழல் வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சே, சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
முன்னாள் கடற்படை வீரரான இவர் மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் இருந்தது. புகாரை இலங்கை குற்ற புலனாய்வு அமைப்பு விசாரித்து வந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அதனை தொடர்ந்து நடந்த மக்கள் போராட்டம் அந்நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலித்தது. தேர்தலில் இடதுசாரி கட்சியான மக்கள் விடுதலை முன்னணி வெற்றி பெற்றது. அக்கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக நிற்க வைக்கப்பட்ட அநுர குமார திசாநாயக்க பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபரானார். இலங்கையின் முதல் இடதுசாரி அதிபர் இவர்தான். அதேபோல அந்நாட்டில் இடதுசாரிகள் ஆட்சியை அமைப்பது இதுதான் முதல்முறை.
இப்படி இருக்கையில், இலங்கையில் சில அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக, உள்நாட்டு போர் காலத்தில் கைப்பற்றப்பட்ட தமிழர்களின் நிலம் மீண்டும், உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதேபோல கடந்த கால ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார். அதேபோல முக்கிய நபர்கள் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை தொடங்கப்பட்டது.
இந்த விசாரணை வேகமாக நடைபெற்று வருவதால், பல்வேறு தலைவர்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே தற்போது மஹிந்த ராஜபக்சவின் மகன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த கைது நடவடிக்கைள் மேலும் தொடரும் என்றும் சொல்லப்படுகிறது. ஊழலற்ற சமூகத்திற்காக இந்த அரசு போராடும் என்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைவர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications