இலங்கை பிரதமர் அலுவலக போர்க்களத்தில் அசர வைத்த அடேங்கப்பா காதல்- முத்த மழை பொழிந்த ஜோடி!
கொழும்பு : இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தை கைப்பற்ற நடைபெற்ற மக்கள் கிளர்ச்சியில் பங்கேற்ற ஒரு காதல் ஜோடி தங்களது அன்பை வெளிப்படுத்த முத்த மழை பொழிந்த படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால், கடந்த சில மாதங்களாகவே அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்ததால், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினர். மேலும், அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று கோரி மக்கள் போராடியதால் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார்.
மேலும், மகிந்த ராஜபக்சேவுக்குப் பின்னர் பிரதமராக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க அரசும் பொருளாதாரத்தை சரிசெய்ய முயற்சிக்கவில்லை என்று கூறியும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும், அனைத்து கட்சிகள் அடங்கிய ஒரு அரசு அமைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
அதிபர் மாளிகையை அடுத்து, தற்போது பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தினர். அதேநேரத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். அவசரநிலை பிரகடனத்தின்படி, ராணுவம் மற்றும் போலீசாருக்கு கூடுதல் அதிகாரம், மக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தத் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
Recommended Video
இதனிடையே, கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றுவதற்காக ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற காதல் ஜோடி ஒன்று, தங்களது அன்பை வெளிப்படுத்தினர். இதனை போராட்டக்காரர்கள் ஆரவாரத்துடன் உற்சாகப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோ மற்றும் படங்கள் சமூக வளைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.