கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்.. ஜனவரி 5ம் தேதி தேர்தல்!
Recommended Video
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டுள்ளார் அதிபர் சிறிசேனா. ஜனவரி 5ம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியாகியுள்ளது.
இலங்கையின் அரசியல் மிகப் பெரிய குழப்பத்தில் இருந்து வந்த நிலையில் சிறிசேனா இந்த முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து ஐக்கிய முற்போக்கு சுதந்திரக் கூட்டணியின் எம்பி லட்சுமண் யாப்பா அபயவர்தனா கூறுகையில், அதிபர் அரசியல் சட்டத்தின் 33 (2) சி பிரிவின் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த முடிவை எடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு ஜனவரி 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. நவம்பர் 19ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி, 26ம் தேதி வரை நடைபெறும். ஜனவரி 17ம் தேதி நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார் அபயவர்தனா.
சிறிசேனாவால் பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சேவால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டது. நாடாளுமன்ற சபாநாயகர் ஜெயசூர்யாவும் சிறிசேனாவுக்கு சாதகமாக இல்லை. ராஜபக்சேவுக்கு சாதகமான நிலை சுத்தமாக இல்லாமல் போனதாலும், இந்த முடிவுக்கு சிறிசேனா வந்துள்ளார். சிறிசேனாவின் இந்த முடிவால் இலங்கை அரசியல் மேலும் சிக்கலாகும், குழப்பமாகும் என்று கருதப்படுகிறது.
கடந்த இரு வாரமாகவே இலங்கை அரசியல் பெரும் குழப்பத்தை சந்தித்து வந்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுடன் சிறிசேனாவுக்கு ஏற்பட்ட கடும் மோதலால் ரணிலை டிஸ்மிஸ் செய்தார் சிறிசேனா. அவருக்குப் பதில் யாரும் எதிர்பாராத வகையில் ராஜபக்சேவை பிரதமராக நியமித்து அதிர வைத்தார். அதன் பின்னர் நிலைமை மேலும் சிக்கலானது.
ராஜபக்சேவுக்கு தேவையான பெரும்பான்மை கிடையாது. இதனால் குதிரை பேரம் தொடங்கியது. ஆனால் அப்படியும் கூட ராஜபக்சேவால் தேவையான பெரும்பான்மை பலத்தை திரட்ட முடியாமல் போனது. இதையடுத்தே நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவுக்கு சிறிசேனா வந்தார்.