இலங்கை புதிய ராணுவ தளபதியாக போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா நியமனம்... அமெரிக்கா கடும் எதிர்ப்பு
கொழும்பு: இலங்கை புதிய ராணுவ தளபதியாக போர்க்குற்றவாளியான சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை ராணுவ தளபதியாக இருந்த லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க பத்வியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனையடுத்து இலங்கை ராணுவத்தின் 23-வது தளபதி யார் என்பது குறித்து குழப்பம் ஏற்பட்டது.
புதிய தளபதி நியமிக்கப்படாமலேயே இருந்ததால் சர்ச்சை வெடித்தது. இதனிடையே இன்று மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை புதிய ராணுவ தளபதியாக நியமிக்கும் உத்தரவை அதிபர் மைத்திரிபால சிறிசேன பிறப்பித்தார்.
ஆனால் சவேந்திர சில்வாவின் நியமானத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது 56வது டிவிசனுக்கு தலைமை தாங்கியார் சவேந்திர சில்வா. இவர்மீது ஐ.நா. மற்றும் சர்வதேச மனித உரிமைப்புகள் பலவும் போர்க்குற்றங்களை சுமத்தி இருந்தன.
இது தொடர்பாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், சவேந்திர சில்வாவுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை மற்றும் நம்பகமானவையாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.