இலங்கையில் 50 நாட்களை தொட்ட போராட்டம்.. மக்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு! மிரண்டுபோன போலீசார்
கொழும்பு: இலங்கையில் மக்கள் போராட்டம் தொடரும் நிலையில், அமைதியாகப் போராட்டம் நடந்த இடத்தில் போலீசாரின் நடவடிக்கை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில காலமாகவே பல்வேறு காரணங்களால் இலங்கை நாட்டின் பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் போராட்டம் அங்கு வெடித்தது.
மக்கள் போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்ததில் அரசியல்வாதிகளின் வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார்

இலங்கை
அவருக்கு பதிலாக ரணில் விக்ரமசிங்க இலங்கை நாட்டின் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற உடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, வரும் காலம் மோசமாக இருக்கும் என்றும் நாட்டின் நிலைமையை மீட்டெடுக்க இரு மாதங்கள் ஆகும் என்றும் தெரிவித்திருந்தார். மறுபுறம் உலக நாடுகளிடம் இருந்து நிதியைப் பெறும் முயற்சியிலும் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ
இலங்கையில் தொடர்ந்து நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் 50 நாட்களை எட்டியுள்ளது. போராட்டம் தொடங்கி 50 நாட்கள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவின் அலுவலகத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர். அதில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் கோஷம் எழுப்பினர்.

கண்ணீர்ப் புகைக் குண்டு
அப்போது எதிர்பாராத விதமாக போலீசாருக்கும் அமைதியாகப் போராடிக் கொண்டிருந்த போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தைக் கலைக்க அவர்கள் மீது தண்ணீர் பீரங்கி மூலம் தண்ணீரை பிய்த்து அடித்தனர். மேலும், போராட்டக்காரர்களைக் கலைக்க அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் அவர்கள் வீசினர். இதனால் மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினர்.

போர்க் களம்
இதன் காரணமாக அந்த இடமே போராட்ட களம் போலக் காட்சி அளித்தது. முன்னதாக கடந்த மே 9ஆம் தேதி அமைதியாகப் போராடி வந்த போராட்டக்காரர்கள் மீது ராஜபக்ச ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது ஏற்பட்ட திடீர் வன்முறையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். ஒருபுறம் இப்படி மக்கள் போராட்டம் நடைபெறும் நிலையிலும், உலக நாடுகளிடம் உதவிகளை பெரும் முயற்சியில் இலங்கை இறங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications