வரலாறு காணாத ஒற்றுமை! இலங்கையில் விரட்டப்பட்ட ராஜபக்சேக்கள்! மாஜி அதிபர் சந்திரிக்கா பெருமை
கொழும்பு: ராஜபக்சேக்களின் செயல்பாட்டால் தான் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. இருப்பினும் சிலிர்க்க வைத்த மக்கள் புரட்சி செய்து அவர்களை விரட்டியடித்துள்ளனர். தற்போது உணர்வுரீதியாக ராஜபக்சேக்கள் அழிந்துபோய்விட்டனர் என இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா கூறியுள்ளார்.
இலங்கை வரலாறு காணாத வகையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலைகள் கிடுகிடுவென உயர்ந்தன. இதனால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தின.
இந்த போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளிநாடுக்கு தப்பியோடிய நிலையில் அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பினார். இதனால் தற்போது இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே செயல்பட்டு வருகிறார்.

முன்னாள் அதிபர் சந்திரிகா பேட்டி
இலங்கையில் அரசியல்வாதிகள் மாறியிருந்தாலும் கூட தற்போதைய சூழலில் மக்களின் வாழ்வாதாரம் இன்னும் சீராகவில்லை. தொடர்ந்து உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதோடு, மின்வெட்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து அந்த நாட்டின் முன்னாள் பிரதமரும், அதிபருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ‛தி இந்து' நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

ஊழல்- மோசமான ஆட்சி
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இரண்டு ராஜபக்சேக்களின் ஆட்சி தான் காரணம். இவர்கள் செய்த ஊழல் தான் நாட்டை பொருளாதார நெருக்கடி நிலைக்கு தள்ளியுள்ளது. இவர்களின் ஆட்சி என்பது மோசமான வெறுக்கத்தக்க ஆட்சியாக இருந்தது. அனைத்து இடங்களிலும் ஊழல் ஊற்றெடுத்து இருந்தது. ஊழல் என்பது மேலிருந்து கீழாக, செங்குத்தாக, கிடைமட்டமாக பரவி இருந்தது. பொதுத்துறை, தனியார் துறை என அனைத்து இடங்களில் ஊழல் பரவி இருந்தது. ராஜபக்சேக்களுக்கு எதிரான பல வழக்குகள் சரியான முறையில் கையாளப்பட்டிருந்தால், எண்ணற்ற தண்டனைகள் கிடைத்திருக்கும். இலங்கையும் தப்பித்து இருக்கும்.

விரட்டியடிக்கப்பட்ட ராஜபக்சேக்கள்
மாற்றம் என்பது முக்கியமானது. இதுதான் சமூக அரசியல் எழுச்சி புரட்சிக்கானது. பிரெஞ்சு குடியரசு, அமெரிக்கா புரட்சிகள் மாற்றத்தை கொண்டு வந்துள்ளன. அதேபோல் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சமூக அரசியல் புரட்சியை எழுச்சியாக நடத்தி ராஜபக்சேக்களை விரட்டியடித்துள்ளனர். நான் அரசியலில் பதவிக்கு வருவதற்கு முன்னரே நல்லிணக்கத்திற்காக நீண்ட காலம் உழைத்தேன். தற்போதைய போராட்டத்தில் இதனை கண்ணால் நேரடியாக பார்த்தேன். வெவ்வேறு இன, மத சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சகோதர சகோதரிகளை போல் இணைந்ததை இதற்கு முன்பு பார்த்தது இல்லை. இந்த போராட்டத்தில் நான் அதிர்ந்து போனதற்கு இதுவும் ஒரு காரணமாகும். ராஜபக்சேக்கள் உணர்வுப்பூர்வமாக அழிந்துவிட்டார்கள்.

சிலிர்க்கிறேன்
இத்தகைய மக்கள் எழுச்சியை நினைத்து நான் சிலிர்க்கிறேன். இந்த போராட்டக்காரர்களின் பார்வை மிகவும் சிறப்பாக இருந்தது. ராஜபக்சேக்களின் ஆட்சியை அகற்றுவது மட்டுமின்றி நேர்மையானவர்கள ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இருந்தனர். 10 அம்ச திட்டங்களை வைத்திருந்தனர். இதனால் அவர்களுக்கு 90 சதவீத மக்கள் ஆதரவு வழங்கினர். மே 9ம் தேதி எம்பிக்கள் மற்றும் ரணில் விக்ரமசிங்கேவின் வீடுகளை எரித்தது யார்? என்பதில் சந்தேகம் உள்ளது. இந்த செயலில் ஈடுபட்டவர்களை மன்னிக்க விரும்பவில்லை. ஓட்டெடுப்பு மூலம் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது நாட்டில் ஓரளவு நல்ல நிலையை கொண்டு வந்துள்ளது. எரிபொருள் வினியோகம் ஓரளவுக்கு முறைப்படுத்தப்பட்டுள்ளது.

மனம் திறந்து பேச வேண்டும்
ரணில் விக்ரமசிங்கே பொருளாதாரத்தை புரிந்து கொண்டவர் என்பதால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி முற்றிலும் தேவை என்பதை புரிந்து அதற்கான பணியை துவங்கினார். மேலும் நஷ்டமடையும் நிறுவனங்களை பொது-தனியார் பங்களிப்பில் செயல்படுத்த வேண்டும். நான் இதனை மேற்கொண்டேன். எதிர்ப்புகள் வந்தாலும் கூட அதனை சமாளிக்க முடிந்தது. தற்போது ரணில் விக்ரமசிங்கே எப்படி செயல்படுகிறார் என்பதை பார்க்க காத்திருக்கிறேன். நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல ரணில் விக்ரமசிங்கேவுக்கு வாழ்த்துக்கள். இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலைகளில் தலைவர்கள் தாராள மனத்துடன் இருக்க வேண்டும். மக்களிடம் மனம் திறந்து பேச வேண்டும். மக்களின் பிரச்சனைகளை காதுகொடுத்து கேட்டு தீர்க்க வேண்டும். குறிப்பாக தற்போதைய சூழலில் அதிபரிடம் இருக்கும் அதிகபட்ச உரிமைகளை பறிக்கும் வகையிலான அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் 19வது திருத்தத்தையாவது மீட்டெடுக்க வேண்டும்.

மீட்டெடுக்கும் வழிகள்
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றால் இலவச கல்வி, இலவச சுகாதாரம் உள்ளிட்ட திட்டங்களை தவிர பிறவற்றுக்கான மானியத்தை குறைக்க வேண்டும். பணியாளர்கள் அதிகமுள்ள அரசு நிறுவனங்களில் தன்னார்வ ஓய்வூதிய திட்டங்களை அறிமுகம் செய்து கடன் கிடைக்க வழி செய்வது அரசுக்கு பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும். மேலும் தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும். தற்போது பொதுத்துறை நிறுவனங்களில் ஊழல் தலைவிரித்தாடுவதால் தனியார் பங்களிப்பு செய்யலாம்'' என கூறினார்.












Click it and Unblock the Notifications