இலங்கை: ஜூலை 9-ல் புயல்தான்- நாளை சுனாமியே தாக்கும்- ராஜபக்சேக்களுக்கு பவுத்த பிக்குகள் வார்னிங்
கொழும்பு: இலங்கையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே பதவியில் நீடித்தால் நாளை சுனாமியே தாக்கும் அளவுக்கு போராட்டம் வெடிக்கும் என்று பவுத்த பிக்குகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் மக்களின் தன்னெழுச்சியான கிளர்ச்சிகளைத் தொடர்ந்து முதலில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். ஆனாலும் மக்கள் கிளர்ச்சி ஓயவில்லை.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, இடைக்கால பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இருவரும் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இருந்தபோதும் இதுபற்றி உறுதியான அறிவிப்புகள் வெளியாகவில்லை.
இன்னொரு பக்கம், கோத்தபாய ராஜபக்சேவின் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அங்கேயே தங்கி உள்ளனர். அப்பகுதியில் இருதரப்பினரிடையே மோதல் வெடித்ததால் பதற்றமும் நிலவுகிறது.
இந்நிலையில் போராட்டக்காரர்களை பவுத்த பிக்குகள், அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் சந்தித்து பேசினர். அப்போது, பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாத அரசியல் தலைவர்களை மக்கள் நிராகரிப்பது நிச்சயம் என்றனர்.
மேலும் இப்போதும் ராஜபக்சே சகோதரர்களில் சிலர் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற துணிகின்றனர்; அப்படி நடப்பதை பொதுமக்கள் அனுமதிக்கமாட்டார்கள். கடந்த 9-ந் தேதி இலங்கை அரசியலில் புயல்தான் தாக்கியது. ராஜபக்சேக்களின் போக்குகள் தொடர்ந்தால் நாளை சுனாமிதான் இலங்கை அரசியலைத் தாக்கும்; அந்த அளவுக்கு போராட்டம் உக்கிரமானதாக இருக்கும் என எச்சரித்தனர்.
ஏற்கனவே மக்களின் போராட்டங்களை எதிர்கொள்ளாமல் இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் நாட்டை விட்டு தப்பி ஓடி வருகின்றனர். இலங்கையில் இருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே, இன்று அதிகாலை விமானம் மூலம் வெளிநாடு தப்ப முயன்றார். ஆனால் விமான நிலையத்தில் அதிகாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பினால் பசில் ராஜபக்சேவால் தப்பி ஓட முடியவில்லை. இதனால் மீண்டும் வீட்டுக்கே திரும்பினார் பசில் ராஜபக்சே என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications