எத்தனை வருட பகை.. தமிழர்களையும் சிங்களர்களையும் இணைத்த "ராஜபக்சேக்கள்".. இலங்கையில் பெரும் மாற்றம்!
கொழும்பு: இலங்கை அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் கடுமையான மக்கள் போராட்டம் அந்த நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த போராட்டம் பல வருடமாக மோதலில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த சிங்களர்கள், தமிழர்களை ஒன்றிணைய வைத்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை எதிர்த்து அங்கு மக்கள் வீதிக்கு இறங்கி போராடி வருகிறார்கள். கடந்த இரண்டு மாதமாக நடந்து வந்த போராட்டம் அங்கு தற்போது உச்சம் தொட்டுள்ளது.
மக்களின் கடுமையான அழுத்தம் காரணமாக இலங்கையின் மொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்துள்ளது. அதோடு புதிதாக அறிவிக்கப்பட்ட இலங்கையின் இடைக்கால அமைச்சர்களும் அங்கு ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க விரும்பவில்லை.

ராஜினாமா
இன்றுதான் இலங்கையின் நிதி அமைச்சர் அலி சப்ரி ராஜினாமா செய்துள்ளார்.பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் நிதி அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்தார் அலி சப்ரி. இலங்கையில் நேற்று பதவியேற்ற புதிய அமைச்சரவையில் இருந்த 4 பேரில் ஒருவர் அலி சப்ரி. அங்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகும் வரை போராட்டம் நிற்காது என்றே தோன்றுகிறது. அதோடு அதிபர் பதவியையே நீக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுக்க தொடங்கி உள்ளன.

பல வருட பகை
இலங்கையில் நடக்கும் போராட்டத்தில் தற்போது மொத்தமாக மக்கள் எல்லோரும் களமிறங்கி உள்ளனர். மருத்துவர்கள், மாணவர்கள், பெண்கள், சிறுவர் சிறுமியர் கூட களத்தில் இறங்கி போராடி வருகிறார்கள். அட்டப்பட்டு, ஜெய் சூர்யா, இலங்கையின் தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் திமுத் கருணாரத்னே போன்ற கிரிக்கெட் வீரர்கள் என பலர் களத்தில் இறங்கி போராடி வருகிறார்கள். இலங்கையில் உள்நாட்டு போர் நிலவி வந்த போது தமிழர்கள் - சிங்களர்கள் - இஸ்லாமியர்கள் இடையே மோதல் நிலவி வந்தது.

மக்கள் களமிறங்கி உள்ளனர்
இவர்கள் இடையே பெரிய பகையே இருந்தது. இது 70 ஆண்டிற்கு மேலான பகை. அதிலும் இந்து தமிழர்கள் - இஸ்லாமிய தமிழர்கள் இடையிலும் கூட பிரிவினை இருந்தது. ஆனால் இந்த போராட்டம் அங்கு எல்லோரையும் ஒன்றாக பாதித்து இருக்கிறது. மதம் வேறாக, இனம் வேறாக இருந்தாலும் எல்லோருக்கும் வயிறு ஒன்றுதான்.. பசி ஒன்றுதான்.. கஷ்டம் ஒன்றுதான். இந்த பொருளாதார சரிவுதான் இலங்கையில் நிலவிய மோதலை மீறி மக்களை ஒன்றாக இணைத்து உள்ளது.

ஒரு புள்ளியில் இணைந்துள்ளனர்
அதிலும் சிறுபான்மையினரின் ஆதரவே வேண்டாம் என்று ஆட்சிக்கு வந்த குடும்பம் ராஜபக்சே குடும்பம். சிறுபான்மையினர் ஆதரவு இல்லாமல் சிங்களர்கள் ஆதரவோடுதான் ராஜபக்சே குடும்பம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் அதே சிங்களர்கள்தான் ராஜபக்சே குடும்பத்தை எதிர்ப்பதில் முன்னிலை வகிக்கிறார்கள். எந்த இனவாதம் தங்களை காக்கும் என்று ராஜபக்சேக்கள் நினைத்தார்களோ அதே இனம் அவர்களுக்கு எதிராகவே திரும்பி உள்ளது.

தீவிரவாத தடை சட்டம்
கொழும்பில் கோத்தபயவும், மகிந்தவும் தேர்தல்களில் வென்ற போது யார் வெடி வெடித்து கொண்டாடினார்களோ அதே மக்கள்தான் தற்போது ராஜபக்சே குடும்பத்தை உதறி தள்ளி இருக்கிறது. அதோடு இலங்கையில் போராடும் மக்கள் மீது இப்போது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தங்கள் உணவிற்காக போராடும் மக்களை கூட தீவிரவாதிகள் என்று இலங்கை அரசு கைது செய்கிறது. இப்போதுதான் அங்கு சாதாரண தமிழர்கள் கூட தீவிரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதன் வேதனையை சிங்களர்கள் உணர்ந்து உள்ளனர்.

வக்கீல்கள் களமிறங்கினர்
தமிழர்களுக்கு நேர்ந்த போது அதன் ஆழம் புரியாத, ஆபத்து புரியாத சிங்களர்கள்.. அந்நாட்டு அதிகார வர்க்கத்தின் பவரை இப்போதுதான் நேரில் கண்டுள்ளனர். இந்த முறை போராட்டத்திலும் சட்டத்துறையின் தீவிர ஆதரவும் மக்கள் பக்கமே உள்ளது. கைது செய்யப்படும் மக்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கில் அங்கு வக்கீல்கள் களமிறங்கி உள்ளனர். எங்கே ராஜபக்சே குடும்பத்திற்கு ஆதரவாக இருந்தால் தங்களுக்கும் ஆபத்து வருமோ என்று கூட்டணி கட்சிகளும் அஞ்சி வருகின்றன.

எம்பிக்கள்
அங்கு நாடாளுமன்றத்தில் உள்ள 225 இடங்களில் ஆளும் ஶ்ரீ லங்கா பொதுஜன சுதந்திர கூட்டமைப்பிற்கு 145 இடங்கள் வரை உள்ளன. ஆனால் கூட்டணி கட்சிகள் அங்கு ஆளும் தரப்பிற்கு ஆதரவை வாபஸ் வாங்கி வருகின்றன. ஏற்கனவே அங்கு 40+ எம்பிக்கள் ஆளும் தரப்பிற்கு ஆதரவை வாபஸ் வாங்குவதாக தெரிவித்துள்ளதால் பிரதமர் கோத்தபய ராஜபக்சேவின் ஆட்சியே முடிவிற்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழர்கள்... சிங்களர்கள் என்று எல்லோரும் ஒன்றாக சேர்ந்து அங்கு ஆட்சியை தூக்கி எறிய போராடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications