தீ பந்தங்களை ஏந்தி வந்த மக்கள்.. ராஜபக்சேக்கள் வீடு மீது கல்வீச்சு.. இலங்கையில் போராட்டம் விஸ்வரூபம்
கொழும்பு: இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சே அலுவலகம் முன் இரவு முழுக்க போராட்டம் நடந்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
Recommended Video

வரலாற்றில் இல்லாத மிக மோசமான பொருளாதார சரிவை இலங்கை சந்தித்துள்ளது. இலங்கையின் அந்நிய செலாவணிக்கான டாலர் கையிருப்பு கிட்டத்தட்ட திவால் ஆகிவிட்டது.
இதனால் இலங்கை அரசால் எரிபொருள், உணவு தானிய இறக்குமதியை மேற்கொள்ள முடியவில்லை. இது நாட்டில் விலைவாசியை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அனைத்து பொருட்களின் விலையும் இலங்கையில் கடுமையாக உயர்ந்துள்ளது.

மக்கள் எதிர்ப்பு
இந்த நிலையில் இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையாக போராடி வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன் முதலில் ராஜபக்சே குடும்பத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் அறிவித்தன. ஆனால் இப்போது இந்த போராட்டங்கள் மிகப்பெரிய மக்கள் போராட்டமாக வெடித்து இருக்கிறது. அதிலும் கடந்த இரண்டு வாரங்களில் போராட்டம் புதிய உயரம் தொட்டு உள்ளது.

அவசர நிலை
கடந்த வியாழக்கிழமை இலங்கையில் மக்கள் அதிபர் கோத்தபய வீட்டின் முன் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அன்று இரவே அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதோடு சனிக்கிழமை மாலை அங்கு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 664 பேர் வரை அங்கு தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதும் செய்யப்பட்டனர். இதெல்லாம் போராட்டத்தை தடுக்கும் என்று கருதி இலங்கை அரசு செய்தது. ஆனால் போராட்டம் நிற்கவில்லை.

ராஜினாமா
இதையடுத்து நேற்று முதல்நாள் இரவு இலங்கை அமைச்சரவை மொத்தமாக ராஜினாமா செய்தது. பிரதமர் மகிந்த ராஜபக்சே தவிர எல்லோரும் ராஜினாமா செய்தனர். அதோடு எதிர்கட்சிகளை கூட்டணி ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தனர். எல்லா எதிர்க்கட்சிகளும் எங்களுடன் இணையும், சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் என்று பிரதமர், அதிபர் அழைப்பு விடுத்தனர். மேலும் இடைக்கால அமைச்சரவையும் இதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் இதை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை.

என்ன நடந்தது?
இந்த நிலையில்தான் இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அதிபர் அலுவலகம் முன் இரவு முழுக்க போராட்டம் நடந்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அமைச்சர்கள் ராஜினாமாவிற்கு பின்பும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அங்கு நேற்று பிற்பகலுக்கு பின்பாக போராட்டம் மிக தீவிரமாக உருவெடுத்தது. முன்னாள் அமைச்சர்கள், ராஜபக்சே குடும்பத்தினர் வீடு முன் போராட்டம் நடத்தப்பட்டது.

முன்னாள் அமைச்சர்கள்
முக்கியமாக ராஜபக்சே குடும்பத்தினர் சிலரின் வீடுகள் மீது மக்கள் கற்களை எறிந்து போராட்டம் செய்தனர். மொத்தமாக மகிந்த, கோத்தபய ஆகிய இரண்டு ராஜபக்சேக்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சில முன்னாள் அமைச்சர்களின் வீடுகளின் மீது வாட்டர் பாட்டில்கள் வீசப்பட்டது. அதேபோல் பிரதமர் மகிந்த ராஜபக்சே வீடு முன் மக்கள் நேற்று இரவு போராட்டம் நடத்தினர். இன்னொரு பக்கம் அதிபர் மகிந்தவின் அலுவலகம் முன் இரவு முழுக்க மக்கள் போராட்டம் செய்தனர். அங்கு 4 அடுக்கு பேரிகேட் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

உடைக்கப்பட்ட பேரிகேட்
ஆனால் இந்த 4 அடுக்கு பாதுகாப்புகளை இலங்கை மக்கள் உடைத்தனர். அதிபர் அலுவலகம் முன் தீ பந்தங்களை ஏற்றி இரவு முழுக்க கேம்ப் போட்டு போராட்டம் செய்து வருகின்றனர். பல இடங்களில் இலங்கை ராணுவம் இவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பல இடங்களில் மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இலங்கையில் மக்கள் போராட்டத்திற்கு அட்டப்பட்டு, ஜெயசூர்யா போன்ற கிரிக்கெட் வீரர்களும் ஆதரவு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications