இலங்கையில் 359 பேரை பலி கொண்ட தொடர் குண்டுவெடிப்புகள்.. சிறிசேனா சொல்லும் 'அடேங்கப்பா' காரணங்கள்!
கொழும்பு: இலங்கையில் 359 பேரை பலி கொண்ட தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணி என்ன என்பது குறித்து கொழும்பில் அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று விளக்கம் அளித்துள்ளார்.
ஈஸ்டர் நாளில் இலங்கையில் தேவாலயங்கள், ஹோட்டல்களில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 47 குழந்தைகள் உட்பட 359 பேர் பலியாகினர்.

இச்சம்பவங்களுக்கு பொறுப்பேற்பதாக சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். அறிவித்துள்ளது. இத்தாக்குதல்களின் மூளையாக செயல்பட்டது மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த ஹாசீம் என்பதும் அம்பலமானது.
இதனைத் தொடர்ந்து அந்நாட்டு பாதுகாப்புத் துறை செயலாளர், காவல்துறை தலைவர் ஆகியோரை ராஜினாமா செய்ய அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். இந்நிலையில் கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சிறிசேனா, தீவிரவாதிகளுக்கும் போதைப் பொருள் மாபியா கும்பலுக்கும் தொடர்பு உள்ளது.

போதைப் பொருள் கும்பலை ஒழிக்கும் நடவடிக்கையில் எமது அரசாங்கம் தீவிரமாக உள்ளது. அதனால்தான் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மேலும் உள்நாட்டு யுத்தம் முடிந்த பின்னர் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். இதனால் புலனாய்வுத்துறை பலவீனமடைந்தது. இதுவும் தீவிரவாதிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது.

இலங்கையில் மொத்தம் 140 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர். இவர்களில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications