இலங்கையின் தற்காலிக ஜனாதிபதியாக ரணில்? நாளை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகிறது?
கொழும்பு: இலங்கையின் தற்காலிக ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தால் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் கோத்தபாய ராஜபக்சே. அவர் தமது ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டு பிரதமராக உள்ள ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அனுப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி ராஜினாமா செய்ததால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வரும் 20-ந் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 19-ந் தேதி நடைபெறும். ஜனாதிபதி பதவி காலியாகும் நிலையில், நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு அதில் எம்.பி. ஒருவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவர். இதனைத்தான் இலங்கை அரசியல் சாசனம் வழிகாட்டியாக வழங்கி உள்ளது.
தற்போதைய நிலையில் அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவார் எனவும் கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக தற்காலிக ஜனாதிபதியாக பிரதமர் பதவியில் இருந்து விலக ஒப்புக் கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்பார் என்கின்றன கொழும்பு தகவல்கள். இதற்கான அறிவிப்பை இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா வெளியிட உள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கேவைப் பொறுத்தவரையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே ஒரு நியமன எம்.பி. அவரை இடைக்கால பிரதமராக நியமித்ததையே அண்டை நாடுகள் பலவும் ஏற்றுக் கொள்ளவில்லை. அத்துடன் கோத்தபாய ராஜபக்சே பதவி விலகும் நிலையில் ரணில், ஜனாதிபதியாகவும் முயற்சித்தார் எனவும் கூறப்பட்டது. இதற்கு பல நாடுகள் மிக கடுமையான எதிர்ப்பையும் தெரிவித்தன.
அதேபோல் ராணுவத்தின் உதவியுடன் முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகாவும் ஜனாதிபதி பதவியை கைப்பற்ற முயற்சிக்கிறார் எனவும் சிங்கள ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. ஆனால் நேற்று நடைபெற்ற அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட சரத் பொன்சேகா, சஜித் பிரேமதாசவையே ஜனாதிபதி வேட்பாளராக ஏற்பதாகவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications