உச்சத்தில் பொருளாதார நெருக்கடி.. ஸ்தம்பித்த இலங்கை! ஆனால் இந்த இடத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்
கொழும்பு: இலங்கை நாட்டில் கடுமையான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு காரணமாக இலங்கை நாடு முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
இலங்கை நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ஒரு பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதைச் சமாளிக்க இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இருந்தாலும் கூட, இலங்கை நாட்டின் பொருளாதார நிலைமை இன்னும் மேம்படவில்லை. அந்நாட்டின் பொதுமக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு இயற்கை விவசாயம் காரணமா? முழு விவரம்
இலங்கை குழப்பம்
இலங்கை நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. முக்கியமாக பெரும்பாலும் சுற்றுலாத் துறையையே நம்பி இருக்கும் நாடு இலங்கை. கொரோனா பெருந்தொற்றில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட துறையாகச் சுற்றுலாத் துறை இருக்கும் நிலையில், இன்னும் கூட சுற்றுலாத் துறை முழுமையாக மேம்படவில்லை. இத்துடன் இயற்கை விவசாயம் காரணமாக வேளாண் துறையில் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளதால் இலங்கை பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குச் சென்றது.
மக்கள் போராட்டம்
இந்தப் பொருளாதார நிதி நெருக்கடியைச் சமாளிக்க இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இருப்பினும், அவை பெரியளவில் பலன் தரவில்லை. இதனால் இலங்கை மக்கள் ராஜபக்ச அரசுக்கு எதிராகத் திரும்பி உள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு, ராஜபக்ச வீட்டிற்கு அருகில் திடீரென அந்நாட்டு மக்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாகப் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெறிச்சோடிய இலங்கை
நாளுக்கு நாள் மக்கள் போராட்டம் அதிகரித்து வருவதால், இலங்கையில் நாடு முழுவதும் 36 மணி நேர முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மாலை 6 மணி அமலுக்கு வந்த இந்த முழு ஊரடங்கு வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 4) காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டின் பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இலங்கை நாடு முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
பெட்ரோல் பங்குகள்
அதேநேரம் இந்த ஊரடங்கு அனைத்து இடங்களிலும் மக்கள் நடமாட்டத்தை முடக்கிவிடவில்லை. குறிப்பாக பெட்ரோல் பங்க்குகளில் நிலைமை நேர்மாறாக இருந்தது. அங்குக் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில், பெட்ரோல் - டீசலை பெற மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். பொருளாதார நெருக்கடி இலங்கையில் மிக மோசமாக உள்ளதால், நிலைமை எப்போது மேம்படும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றே வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
40,000 டன் டீசல்
மோசமான நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாததால் மற்ற நாடுகளிடம் இலங்கை உதவி கோரும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, 1 பில்லியன் டாலர் கடனுதவியை இந்தியா அறிவித்துள்ள நிலையில், 40,000 டன் டீசலையும் இலங்கை நாட்டிற்கு இந்தியா அனுப்பி உள்ளது. இலங்கை நாட்டில் மோசமான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா அனுப்பிய டீசல் இலங்கைக்குப் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.