பிரபாகரன் போதைப் பொருள் கடத்தினார் என்பதா? சிறிசேனா மீது விக்னேஸ்வரன் பாய்ச்சல்
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் போதைப் பொருள் கடத்தி ஆயுதங்களை வாங்கினார் என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா கூறியுள்ளதற்கு வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விக்னேஸ்வரன் கூறியுள்ளதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் போதைப் பொருட்களை பயன்படுத்தியவர்கள் எவரும் இல்லை. எந்த ஒரு விடுதலைப் புலி உறுப்பினரும் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சம்பவமும் நடைபெற்றது இல்லை.
2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்துக்குப் பின்னரே தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதுவும் இலங்கையின் முப்படையினரும் குவிக்கப்பட்ட நிலையில் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், போதைப் பொருட்களை கடத்தி ஆயுதங்களை வாங்கினார் என மைத்திரிபால சிறிசேனா கூறுவது அர்த்தமற்றது. ஆதாரம் இல்லாதது. விடுதலைப் புலிகள் போதைப் பொருட்களை கடத்தினார்கள் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா?
இவ்வாறு விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது ராணுவ தளபதியாக இருந்த சரத்பொன்சேகாவும் சிறிசேனாவின் குற்றச்சாட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.