"காலனி.." அதிகரிக்கும் எதிர்ப்பு குரல்கள்.. சீனாவுடனான இலங்கை நெருக்கம் குறையுமா?
கொழும்பு: சீனாவுடனான நெருக்கத்தை இலங்கை மறு பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதோ என்ற சந்தேகங்களை சமீபத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் உறுதி செய்கின்றன.
Recommended Video
கடந்த ஆண்டு கொரோனா பரவ ஆரம்பித்த காலத்திலிருந்து, இலங்கைக்கு முக்கியமான மற்றும் சரியான நேரத்தில் ஆதரவை வழங்குவதில் சீனா முதலிடத்தில் உள்ளது.
2 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன்கள் மற்றும் பண பரிமாற்றம் செய்யப்பட்டது. 10 லட்சம் அளவுக்கான சினோபார்ம் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது சீனா. 60 லட்சம் தடுப்பூசிகள் இலங்கையால், சீனாவிலிருந்து, கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த கால உறவு மற்றும் கொரோனா கால உதவிகளையும் தாண்டி, சீனா மீது இலங்கையில், எதிர்ப்பு உணர்வு அதிகரித்துக் கொண்டு வருகிறது.

இலங்கையின் தேசியவாத அரசியல்
இலங்கையில் கோலோச்சி இருப்பது சிங்கள தேசியவாத அரசியல்தான். அவர்கள் மேற்கத்திய நாடுகளை "ஏகாதிபத்தியம்" என்று அழைக்கிறார்கள். இந்தியாவை தங்கள் நாட்டு விவகாரங்களின் "தலையீட்டாளர்" என்று கருதுபவர்கள். இப்படித்தான் அவர்கள் பிறரை ஒதுக்கி வைத்தே வந்துள்ளனர். திடீரென சீனா தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை சற்று தாமதமாக புரிந்து கொண்டு இப்போது கிளர்ந்து எழ ஆரம்பித்துள்ளனர்.

இலங்கை வீதிகளில் சீன மொழி
இந்த ஆண்டு மே மாதம், சீனாவுக்கு ஆதரவாக கொழும்பு துறைமுக நகரத்தை நிர்வகிக்கும் ஒரு சர்ச்சைக்குரிய மசோதாவை அரசு நிறைவேற்றியது, அண்மையில் பொது இடங்களில், தேசிய மொழிகளில் ஒன்றான தமிழைத் தவிர்த்துவிட்டு, சீனாவின், மாண்டரின் மொழியில், பெயர் பலகை, வழிகாட்டு பலகைகள் வைக்கப்பட்டது போன்ற விவகாரங்களில், இலங்கையில் தேசிய உணர்வு முன்னுக்கு வந்ததை கவனிக்க முடிந்தது. போர்ட் சிட்டி மசோதாவுக்கு எதிராக புத்த பிக்குகள் திரண்டுள்ளனர். அந்த நாட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்துவோர் இவர்கள்தான் என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. தங்கள் நாட்டில் ஒரு "சீன காலனியை" ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று அவர்கள் கூறிய வார்த்தை மிகவும் பிரபலமடைந்துள்ளது.

சீன ஆதரவு
முந்தைய அரசில் இலங்கை நாட்டுக்கான சீனாவின் தூதராக பணியாற்றியவர் கருணசேனா கொடிடுவாக்கு. சீனாவுடன் நல்ல நட்போடு இருந்தவர். அவர் கூறுகையில், சீன எதிர்ப்பு வளர காரணம், ராஜபக்ஷ நிர்வாகம்தான். இலங்கையர்கள் துறைமுக நகரத்தை "சீன காலனி" என்று அழைப்பது குறுகிய நோக்கம் கொண்டது. இந்த திட்டத்திற்கு "மிகவும் எதிர்மறையான அர்த்தத்தை" அந்த வார்த்தை கொடுக்கிறது. "போர்ட் சிட்டி இலங்கைக்கு ஒரு நல்ல முதலீடு. முந்தைய அரசு, நாட்டை ஒரு பிராந்திய நிதி மையமாக அபிவிருத்தி செய்ய இந்த திட்டத்தை பயன்படுத்த விரும்பியது. தற்போதைய நிர்வாகம் அதை ஒரு முதிர்ந்த முறையில் கையாண்டிருக்க வேண்டும், மேலும் தேசிய ஒருமித்த கருத்தை கட்டியெழுப்ப வேண்டும். அவர்கள் அதை செய்யத் தவறிவிட்டனர், " என்று அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் போட்டியாளர் சீனா
முன்னாள் வெளியுறவு செயலாளர் பிரசாத் கரியவாசம் கூறுகையில், தனது புவியியல் இருப்பிடத்தைப் பொறுத்தவரை, சீனா உள்ளிட்ட கடல் நாடுகளுடன் சீனா, பழங்காலத்திலிருந்தே நட்புறவைப் பேணி வருவதாகக் கூறினார். இத்தகைய உறவுகள் எப்போதும் "ஸ்டேட்டர்ஜி" கொண்டிருந்தன. ஆனால் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான பாரம்பரிய நட்பு இப்போது "மிகவும் நுணுக்கமாக" மாறியுள்ளது. சீனா ஒரு "கூட்டாளர் மற்றும் ஒத்துழைப்பாளராக" பார்க்கப்பட்ட நிலை மாறி, இப்போது ஒரு "போட்டியாளராக" கருதப்படுகிறது. "21 ஆம் நூற்றாண்டில் ஏற்றுமதியை குறிக்கோளாக கொண்டு முன்னேறி வருகிறது சீனா. அந்த வகையில் இலங்கைக்கு அது ஒரு வளர்ச்சி கூட்டாளர் மட்டுமல்ல, இலங்கை மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் வர்த்தக, தொழில்துறை மற்றும் மனித வள நலன்களுடனான ஒரு போட்டியாளராக மாறியுள்ளது. எனவே இரு நாட்டு உறவு சவாலானதாக மாறத் தொடங்கியுள்ளது. குறிப்பாக பொதுமக்களின் மனதில், கவலைகளை எழுப்பியுள்ளது. இலங்கையின் இயல்புத் தன்மை இதுதான்." என்றார் அவர்.

தமிழர்கள் பார்வை
சீனாவுடனான உறவு, உள்நாட்டில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி (டிபிஏ) தலைவரும் எதிர்க்கட்சி எம்.பி.யுமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சிங்கள மக்கள், மற்ற நாடுகளுக்கு "அவர்கள் தேசிய சொத்துக்களை விற்க மாட்டார்கள்" என்ற வாக்குறுதியின் அடிப்படையில் ராஜபக்ஷே ஆட்சிக்கு வந்தார். "விற்பனை" என்ற சொல் கேட்க ஒரு மாதிரி இருக்கலாம், ஆனால் அப்படித்தான் மக்கள் நினைக்கிறார்கள். துறைமுக நகரத்தை சீனா கட்டுப்படுத்துகிறது, அதற்கு அரசே ஆதரவு தெரிவித்து மசோதா நிறைவேற்றுகிறது என்றால் மக்கள் ஐயப்படத்தானே செய்வார்கள்.

சீனா ஆபத்து
மேலும், இலங்கையின் பன்மைச் சூழலை சீனா ஏற்காது. இலங்கை வெவ்வேறு இன மற்றும் மதக் குழுக்களைக் கொண்ட ஒரு மாறுபட்ட நாடு என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும், ஏனெனில் இலங்கை ஒரு முழு "சிங்கள-பவுத்த நாடு அல்ல" என்று கூறுகிறார் கணேசன். இலங்கையில் சீனாவின் இருப்பு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல. இலங்கை தமிழர்கள் சீனாவை சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். ஏனென்றால் தமிழர்களை சீனா இலங்கையர்களாக ஏற்றுக்கொள்ளுமா என்ற ஐயம் உள்ளது. தீவிர இனவாத சிங்களர்கள் மற்றும் தமிழர்கள் ஆகிய இரு தரப்பும், சீனாவுக்கு எதிரான மனநிலையில் இருப்பதால், இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையை பரிசீலனை செய்ய நேரம் வந்து விட்டதாகவே தெரிகிறது.












Click it and Unblock the Notifications