ஆடல் வல்லான் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம்..குளிர குளிர அபிஷேகம்..சிவ ஆலயங்களில் குவிந்த பக்தர்கள்
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் விழா கோலாகலமாக நடைபெற்றது. நடராஜருக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், இளநீர் உள்பட 16 வகையான குளிர்ச்சி மிகுந்த பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதிகாலையில் ஆடல்வல்லான் நடராஜருக்கு நடைபெற்ற மகா அபிஷேகத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தட்சிணாயன புண்ணிய காலத்தின் கடைசி மாதத்தில் ஆனி மாத உத்திர நட்சத்திர நாளில் தேவர்கள், ஆடலரசனுக்குப் அபிஷேகம் செய்வதாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அந்த நன்னாளே ஆனித் திருமஞ்சனத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆனித்திருமஞ்சன நிகழ்ச்சியை பதஞ்சலி முனிவர் ஆரம்பித்து வைத்ததாக கூறப்படுகிறது.

ஈசனின் திருநட்சத்திரம் திருவாதிரை. மிக உஷ்ணமான நட்சத்திரம் இது. தவிர, ஆலகாலம் உண்ட நீலகண்டன் அல்லவா ஈசன். சாம்பல் தரித்தவன். அக்னியை ஏந்திக் கொண்டிருப்பவன். ஆக மொத்தம் உஷ்ணாதிக்கத்துடன் இருப்பவன். எனவே, அவனுக்குக் குளிரக் குளிர அபிஷேகம் செய்யச் சொல்கிறது ஆகம விதி. இதனால்தான் சிவபெருமானை அபிஷேகப் பிரியன் என்றும் அழைக்கிறோம்.
'திருமஞ்சனம்' என்ற சொல்லுக்கு 'மங்கல நீராட்டல்' என்று பொருள். ஆனி திருமஞ்சனம் என்பது ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் நடராஜப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகம் மற்றும் ஆராதனையைக் குறிக்கும். உலகை தன் உள்ளங்காலில் சுழல வைக்கும் தத்துவத்தை உணர்த்தும் ஒப்பற்ற உருவமாக நடராஜர் இருக்கிறார்.
சிவபெருமானின் 64 மூர்த்தி வடிவங்களில் நடராஜர் முக்கியமானவா். அந்த நடராஜர் அருளாட்சி செய்யும் இடங்களில் முதன்மையானது, சிதம்பரம் நடராஜர் ஆலயம். இங்கு நடராஜருக்கு ஆண்டுக்கு 6 முறை அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த ஆறு நாட்களில் ஆனி மாதத்தில் வரும் உத்திரமும், மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரையும் சிறப்பு வாய்ந்தவை. ஏனெனில் இந்த இரண்டு நாட்களில் மட்டும்தான், சிதம்பரம் நடராஜருக்கு அதிகாலை நேரத்தில் அபிஷேகம் செய்யப்படும். மற்ற நாட்களில் மாலை நேரத்தில்தான் அபிஷேகம் நடைபெறும்.
நடராஜர் கோவிலில் கடந்த 10 நாட்களாக ஆனி திருமஞ்சனம் விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு இன்று அதிகாலையில் 16 வகையான பொருட்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. குளிர குளிர நடைபெற்ற அபிஷேகத்தை ஏராளமானோர் தரிசனம் செய்தனர். நடராஜருக்கு காலையில் அபிஷேக ஆராதனை நடைபெற்று முடிந்ததும், இரவு மீண்டும் சித்சபையில் கடாபிஷேகம் நடைபெறும்.
விரதம் இருந்து ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள். தம்பதிகளுக்கு சுகமான வாழ்வு கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும். ஆண்களுக்கு மனதில் தைரியமும், உடல் பலமும், செல்வ வளமும் கூடும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. நாடெல்லாம் நல்ல மழை பெய்து விவசாயம் சிறக்கவும் இந்த விழா நடத்தப்படுகிறது.
ஆனி திருமஞ்சனம் விழா தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை, கோனேரிராஜபுரம், செப்பறை உள்ளிட்ட புகழ் பெற்ற சிவ ஆலயங்களிலும் சிவபெருமானின் பஞ்ச சபைகளிலும் பஞ்ச பூத தலங்களிலும் உள்ள நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications