வண்டியை நிறுத்துப்பா! தடுத்து நிறுத்திய அதிமுக எம்.எல்.ஏ.! ஒன்று கூடிய நாம் தமிழர்+பாமக நிர்வாகிகள்!
கடலூர்: கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி.சுரங்க விரிவாக்கப் பணிகளை அதிமுக எம்.எல்.ஏ. அருண் மொழித் தேவன் தடுத்து நிறுத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு பக்கபலமாக பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் அங்கு களமிறங்கி என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஜேசிபி இயந்திரத்தை நிறுத்தினர்.

யாரிடமும் சொல்லாமல் எந்தவொரு முன் அறிவிப்பும் இல்லாமல் அடுத்தவர்கள் நிலத்தை ஆக்கிரமிக்க யார் அதிகாரம் கொடுத்தது என அதிமுக, பாமக, நாம் தமிழர் நிர்வாகிகள் பொங்கி எழுந்தனர்.
இதனால் திகைத்துப்போன அங்கிருந்த ஜேசிபி பொக்லைன் இயந்திர ஓட்டுநர்கள் வண்டியை நிறுத்திவிட்டு திருதிருவென முழித்தனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் என்.எல்.சி. நிறுவனம், அதன் சுரங்க விரிவாக்கத்திற்காக 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த முடிவு செய்திருப்பதாக பாமக தொடர்ந்து போராடி வருகிறது.
என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் அனைத்தும் முப்போகம் விளையக்கூடியவை. ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டித்தரக் கூடியவை என்று அன்புமணி ராமதாஸ் அண்மையில் கூட முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதேபோல் வேல்முருகன், அன்புமணி, அதிமுக எம்.எல்.ஏ. அருண்மொழித் தேவன் உள்ளிட்டோர் தொடர்ந்து என்.எல்.சி.க்கு எதிராக போராடி வருகிறார்கள்.
ஆனாலும் நிலம் கையகப்படுத்துதல் பணியில் தீவிரம் காட்டும் என்.எல்.சி. நிர்வாகம், வளையமாதேவி கிராமத்தில் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு சுரங்க விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications