கனமழை எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு
கடலூர்: 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை திறக்கப்படவுள்ள நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாகக் கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்,
கடந்த 1.5 ஆண்டுகளாகவே கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமே மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தது.
இதனால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இது மாணவர்களுக்கு மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்த வல்லுநர்கள், விரைவில் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

வேக்சின் பணிகள்
வேக்சின் பணிகளால் கொரோனா பாதிப்பு விரைவில் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பள்ளிகளைத் திறப்பது குறித்து அனைத்து மாநில அரசுகளும் முடிவெடுத்து வருகின்றன. அதன்படி தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 9 முதல் +2 மாணவர்களுக்குக் கடந்த செப். 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பள்ளிகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு
வைரஸ் பாதிப்பு தற்போது கிட்டதட்ட முழுமையாகக் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்து. காலை, மாலை எனச் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு, பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், மாணவர்களும் மீண்டும் வகுப்புகளுக்குத் திரும்ப ஆர்வத்துடன் உள்ளனர்.

வானிலை மையம்
இந்நிலையில், வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக அடுத்த 3 நாட்களுக்குக் கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை
இந்தச் சூழலில் கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை, கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை திறக்கப்படவுள்ள நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாகக் கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications