கர்நாடகா தண்ணீர் தரலைல.. நீங்க இத தரமுடியாதுனு சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அன்புமணி கொடுக்கும் ஐடியா!
கடலூர்: காவிரியில் தண்ணீர் திறந்து விட மாட்டோம் என்று கர்நாடகா அரசு கூறிவரும் நிலையில், கர்நாடகாவிற்கு செக் வைக்கும் முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா முரண்டு பிடித்து வருகிறது. காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டத்தில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், கர்நாடகா அரசு அதை ஏற்கவில்லை. கர்நாடகாவில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்திற்குப் பின்னர் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, "கர்நாடக மாநிலம் கடுமையான மழை நீர் பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறது. கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி நிலவும் நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்த பங்கீட்டு விதிமுறையின் படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடும் சூழலில் கர்நாடகம் இல்லை. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாட நாங்கள் முடிவு செய்துள்ளோம். " என்றார். கர்நாடகா அரசின் இந்தப் பிடிவாதம் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.
இந்நிலையில், கடலூர் நாடாளுமன்ற தொகுதி பாமக வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் கடலூரில் நடைபெற்றது. முன்னதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி கடலூர் அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட மாட்டோம் என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் உச்ச நீதிமன்றம் உத்தரவு தந்தாலும் தண்ணீர் திறந்து விட மாட்டோம் என தெரிவித்திருப்பது கடுமையான கண்டனத்திற்குரியதாகும்.
கர்நாடகாவின் செயல் இறையாண்மைக்கு எதிரான செயல். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. கர்நாடகா அரசு யாரையும் மதிக்கவில்லை. மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகாவில் இரண்டு முறை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் கடந்த ஆறு மாதத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படவில்லை. மேலும் தமிழக முதலமைச்சர் கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்து தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு இரண்டு லட்சம் ஏக்கர் கருகி வருகிறது. தண்ணீர் இல்லாத விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு கர்நாடகா அரசுக்கு உடனடியாக அழுத்தம் தர வேண்டும்.
மேலும் காவிரி தண்ணீர் கர்நாடகாவில் உள்ளதால் தண்ணீர் தரமாட்டோம் என கர்நாடகா அரசு கூறியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் கூடங்குளம், கல்பாக்கம், நெய்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதை தாங்கள் தரமாட்டோம் என கூறினால் ஏற்றுக்கொள்ளப்படுமா? என்பதனை தெரிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications