”விளம்பரமேனியாவால் அண்ணாமலை பாதிக்கப்பட்டுள்ளார்" வெளுத்து வாங்கிய விசிக தலைவர் திருமாவளவன்!
கடலூர்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளம்பரமேனியா என்ற மன உளவியல் சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் கிண்டல் செய்துள்ளார்.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. 100 ஆண்டுகள் பழமையான பாலத்தின் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து கடந்த 26ம் தேதி பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்றிரவு அந்தப் பாலம் திடீரென அறுந்து விழுந்தது. இதையடுத்து பாலத்தில் நின்றிருந்த 400 பேர் ஆற்றில் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை 140க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கபட்டு உள்ளது.

குஜராத் விபத்து
இந்த நிலையில் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், மத்திய அரசும், குஜராத் மாநில அரசும் இணைந்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். இதுபோன்ற விபத்து நடந்ததற்கு என்ன காரணம் என்பதை அறிய நீதி விசாரணை செய்ய வேண்டும். இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடக்காமல் இருக்க, வல்லுநர்கள் குழு அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மதவாதம் பேசும் ஆளுநர்
தொடர்ந்து கோவை சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் பாஜகவும், தமிழக ஆளுநரும் செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சிக்கு எதிராக ஆளுநரே கூறுவது அதிர்ச்சியளிக்கிறது. ஆளுநர் ஆர்என் ரவி ஆர்எஸ்எஸ் தொண்டராகவே செயல்படுகிறார். அரசு விழாக்களில் அரசியல் பேசுவது, ஆன்மிகம் என்ற பெயரில் மதவாதம் பேசி வருகிறார். கோவை சிலிண்டர் வெடிப்பு பற்றியும் தவறான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அரசியல் ஆதாயம் தேடும் பாஜக
இன்னொரு பக்கம் கோவை கார் வெடிப்பு தொடர்பாக மத்திய உள்துறை எச்சரித்ததாக அண்ணாமலையும், ஆளுநரும் கூறுவது திட்டமிட்ட அவதூறு. வழக்கமான எச்சரிக்கை அறிவிப்பை, அண்ணாமலை திரித்து கூறி வருகிறார். இந்த விவகாரத்தில் திமுக அரசு மெத்தனமாக செயல்பட்டதாக கூறி பாஜக அரசியல் ஆதாயம் தேடுகிறது.

மதவாத அரசியல்
அதுமட்டுமல்லாமல் கடலூருக்கு வந்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் மற்றும் என்னை கொச்சையாக விமர்சித்துள்ளார். அரசியலை அரசியலாகவும், கருத்தியலை கருத்தியலாகவும் பார்க்க வேண்டும். ஆனால் தனி நபர் தாக்குதல் என்பது அரசியல் அநாகரீகம். கடலூரில் பணம் கொடுத்து கூட்டம் கூட்டி பாஜகவினர் வீராப்பு பேசி சென்றுள்ளனர். ஆனால் கடலூர் மட்டுமல்ல, இங்கு எங்கேயும் காலூன்ற முடியாது. இங்கு மதவாத அரசியலுக்கு இடமில்லை என்று தெரிவித்தார்.

விளம்பரமேனியா
தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு விளம்பரமேனியா என்ற ஒரு மன உளவியல் சிக்கல் உள்ளது. கவன ஈர்ப்பு உளவியல் சிக்கல் பாதிப்பு இருப்பதால், தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி வருகிறார் என்று தெரிவித்தார். அப்போது அருகில் இருந்து அமைச்சர் பன்னீர்செல்வம், மன நோயாளி என்று கூறினார்.

இந்தி திணிப்பு
தொடர்ந்து இந்தி திணிப்பு பற்றிய கேள்விக்கு, மத்திய அரசு இந்தியை திணித்து வருவது உலகறிந்த உண்மை. இது ஆதாரமே தேவையில்லை. இந்தியை திணிப்பதோடு, அதனை வெளிப்படையாகவே பேசுகிறார்கள். நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளான சுற்றிக்கை, கோப்புகள் அனைத்தையும் இந்தி மொழிக்கு மாற்றிவிட்டார்கள். இதனை பெருமையாக சொல்லுகிறார்கள்.

மதவாத தேசியவாதிகள்
உத்தரப் பிரதேசம் உள்ளிட்டஇந்தி பேசும் மாநிலங்களில் இந்தியை கொண்டு செல்வதில் எந்த பிரச்சினையுமில்லை. ஆனால் மற்ற மாநிலங்களில் இந்தியை திணிப்பது சரியில்லை. தற்போது தமிழ்நாட்டில் அரசியல் செய்ய தமிழ் பற்றி பேச வேண்டிய நிலைக்கு பாஜக வந்துள்ளது. பாஜக எப்போதும் மதவாத தேசியவாதிகள். இரட்டை வேடமிட்டு நாடகமாடுகிறார்கள் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications