ஹெச்.ராஜா ஊருக்குள் வரலாம்..! எதிர்ப்பு நிலைப்பாட்டை மாற்றிய கிராமம்..!
கடலூர்: திட்டக்குடி அருகே உள்ள அரியநாச்சியில், விநாயகர் சதுர்த்தி விழாவில் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கலந்துகொள்வதற்கு நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்த கிராமமக்கள் இன்று அதனை திரும்பப்பெற்றுக்கொண்டனர்.
பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவை பொறுத்தவரை அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார். பெரியார், கருணாநிதி, நீதிமன்றம் என யாரையும் அவர் விட்டு வைத்ததில்லை. மேலும், பொதுக்கூட்டங்களில் பேசினாலும் கடுமையான வார்த்தைகளை உமிழ்ந்து தனது ஆதரவாளர்களின் கைதட்டுக்களை பெறுவார்.

இந்நிலையில், அரியநாச்சி கிராமத்தில் நடைபெற இருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அவரை சிறப்பு அழைப்பாளராக ஒரு தரப்பினர் அழைத்திருந்தனர். அதன்படி அவரும் பங்கேற்க ஒப்புக்கொண்டதால் விழா ஏற்பாடுகள் ஒரு புறம் நடந்துகொண்டிருக்க, மற்றொருபுறம் ஹெச்.ராஜாவை ஊருக்குள் விட மாட்டோம் என கிராமமக்கள் மார்தட்டி நின்றனர்.
மேலும், அதிமுக, திமுக கிளைக்கழகம் சார்பாகவும் ஹெச்.ராஜா ஊருக்குள் வருவதை கண்டித்து போஸ்டர் அடித்து ஒட்டினர்.சாமி பெயரில் சாதி வெறியை தூண்ட வரும் இந்து அதர்மவாதி ஹெச்.ராஜா என்ற வாசகம் எல்லாம் அதில் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் போலீஸ் உயர் அதிகாரிகளும், பாஜக நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை மூலம் கிராமமக்களின் மனதை கரைத்து ஹெச்.ராஜா ஊருக்குள் செல்ல ஒப்புதல் பெற்றுவிட்டனர். இதனால் அரியநாச்சி கிராமத்தில் கடந்த 2 நாட்களாக நீடித்து வந்த பதற்றம் தணிந்து அமைதி திரும்பியுள்ளது..











Click it and Unblock the Notifications