நடராஜரை இழிவுபடுத்துவதா.. குண்டர் சட்டத்தில் கைது செய்யுங்கள்..சிதம்பரத்தில் சிவனடியார்கள் ஆவேசம்
சமூக வலைதளங்களில் தில்லை நடராஜரை இழிவுபடுத்தி பேசியதைக் கண்டித்து சிவனடியார்கள் சிவாச்சாரியார்கள் மற்றும் சிவ பக்தர்கள் அனைவரும் இன்று சிதம்பரத்தில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்: சிவபெருமானை இழிவாக பேசிய நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று சிவனடியார்கள் வலியுறுத்தியுள்ளனர். சிதம்பரம் நடராஜ பெருமானையும், தில்லை காளியையும் அவதூறாக பேசிய யுடுயூபரை கைது செய்ய வலியுறுத்தி சிவனடியார்கள் போராட்டம் நடத்தினர்.
Recommended Video
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயம் சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் ஆகாயத்தலமாக போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் நடராஜரை தரிசனம் செய்ய வெளிநாடு, வெளி மாநிலம், பக்தர்கள் தினசரி கோயிலுக்கு வருவது வழக்கம். எப்பொழுதும் கோயிலில் பக்தர்கள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்.
இந்த நிலையில், சுவாமி நடராஜரை பற்றி விமர்சனம் செய்து ஒரு யூடியூப் சேனலில் செய்தி வந்தது. இதற்கு பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அவதூறு பேச்சு
சிதம்பரம் நடராஜப் பெருமானையும், தில்லைகாளியையும் அவதூறாக பேசிய யுடுயூபரை கைது செய்ய வலியுறுத்தி அனைத்து சிவனடியார்கள் ஒன்றினைப்பு குழு சார்பில் சிதம்பரத்தில் பிரம்மாண்ட அளவில் கண்டன போராட்டம் சிவதாமோதரன் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான சிவனடியார்கள் இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.

பல்லாயிரக்கணக்கான சிவனடியார்கள்
இந்த போராட்டத்தில் நடராஜன் சுவாமிகள், வாதவூரடிகள் சுவாமிகள், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில செயலாளர் ஞானகுரு, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத், இந்து மக்கள் தமிழர் கட்சி ராம.ரவிக்குமார், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் ஜோதி குருவாயூரப்பன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் பங்கேற்று உள்ளனர்.

சிவனடியார்கள் கூட்டம்
இன்று காலை முதலே நடராஜர் கோவில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் குவிந்து தேவாரம், திருவாசகம் பாடி சிவதாண்டவம் ஆட்டம் ஆடி, போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்க வந்துள்ள சிவனடியார்கள் 15க்கும் மேற்பட்ட சிதம்பரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் தங்கியிருந்தனர். சிதம்பரத்தில் எங்கு பார்த்தாலும் சிவனடியார்கள் கூட்டம் அலைமோதியது.

குண்டர் சட்டத்தில் கைது செய்க
போராட்டத்தில் பேசிய சிவனடியார்கள்.. சிவபெருமானையும் காளியையும் தவறாக பேசிய நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் எந்த கால கட்டத்திலும் ஜாமினே கிடைக்கக் கூடாது என்றும் ஆவேசமாக பேசினர். அடுத்து ஒருவன் இந்து தர்மத்தின் மீது பேசுவதற்கு ஆசைப்படக்கூடாது. அப்படி செய்தால் எங்களின் கோபம் எப்படிப்பட்டது என்று காட்டும் நேரம் வந்து விட்டது என்று கூறினர்.

பலத்த பாதுகாப்பு
பல்லாயிரக்கணக்கான சிவனடியார்கள் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் குவிந்ததால் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சக்தி கணேசன், ஏடிஎஸ்பி அசோக்குமார், சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications