விசிக டூ தவெக.. விஜய்க்கு வலதுகரமாக மாறிய ஆதவ் அர்ஜுனா! யார் இவர்? விவரம்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு பங்காற்றியவர்களின் மிக முக்கியமானவர்தான் ஆதவ் அர்ஜுனா. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கி, தற்போது தவெகவில் கோலோச்சி வருகிறார். யார் இவர்? முழு விவரத்தை பார்ப்போம்.
ஆதவ் அர்ஜுனா அடிப்படையில் ஒரு தேசிய அளவிலான கூடைப்பந்து வீரர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதியில் தங்கிப் பயின்றவர். விளையாட்டின் மீதான ஆர்வத்தால், பின்னாளில் இந்தியக் கூடைப்பந்து கூட்டமைப்பின் தலைவராகவும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் உயர்ந்தார்.

இவர் நேரடிய அரசியலுக்கு வரும் முன்பே, கிங் மேக்கராக செயல்பட்டிருந்தார். அதாவது, 2014 முதல் திமுக-வுடன் இணைந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டார். குறிப்பாக, 2021 தேர்தலில் திமுக-விற்குப் பிரசாந்த் கிஷோரின் I-PAC குழுவை அறிமுகப்படுத்தியதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. அதேபோல அரசியல் தரவு பகுப்பாய்வு மற்றும் பிரசார யுக்திகளுக்காக வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் என்ற அமைப்பைத் தொடங்கிச் செயல்பட்டு வந்தார்.
திருமாவளவனின் முன்னிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்து, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். விசிக-வை டிஜிட்டல் மயமாக மாற்றியதில் இவரது பங்கு அதிகம். வாரிசு அரசியல் குறித்த விமர்சனம் மற்றும் நடிகர் விஜய்யுடனான நட்பு காரணமாக விசிக-விலிருந்து நீக்கப்பட்டார்.
இதனையடுத்து கடந்த ஆண்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். கட்சித் தலைவர் விஜய்க்கு அடுத்தபடியாக, தேர்தல் பிரசார மேலாண்மைக்கான பொதுச் செயலாளர் என்ற உயரிய பதவி இவருக்கு வழங்கப்பட்டது.
தற்போது நடந்து முடிந்துள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில், சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். திமுகவின் கார்த்திக் மோகனை வீழ்த்தி, சட்டமன்றத்திற்குள் முதன்முறையாக நுழைகிறார்.
அம்பேத்கர், பெரியார் மற்றும் காமராஜர் ஆகியோரின் கொள்கைகளை முன்னிறுத்தும் இவர், அதிகாரப் பகிர்வு பற்றித் தொடர்ந்து பேசி வருபவர். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டு வரும் பாலமாகவும் செயல்படுவதே தனது இலக்கு எனக் குறிப்பிட்டுள்ளார்.
குடும்ப வாழ்க்கை
இவர் 1982ம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ராஜேந்திரன் ஒரு விவசாயி. ஆதவ் அர்ஜுனா திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆதவ் அர்ஜுனா தனது 5 வயதிலேயே தாயாரை (கல்யாணி) இழந்துவிட்டார். அதன் பிறகு தனது பாட்டி மற்றும் உறவினர்களின் அரவணைப்பில் வளர்ந்தார். தனது ஆரம்பக் கல்வியைத் திருச்சியில் உள்ள YWCA பள்ளியிலும், பின்னர் பள்ளிக்கல்வியைத் திருச்சி இராமகிருஷ்ண மிஷன் பள்ளியிலும் முடித்தார்.
உயர்கல்விக்காகச் சென்னை வந்த இவர், புகழ்பெற்ற சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையில் இளங்கலை (BA) மற்றும் முதுகலைப் (MA) பட்டங்களைப் பெற்றார்.
இவர் பிரபல தொழிலதிபர் மற்றும் லாட்டரி கிங் என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டினின் மகள் டெய்சி மார்ட்டினை மணம் முடித்தார். டெய்சி மார்ட்டின் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் மற்றும் நிதிச் சேவை நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
இவரது மாமியார் லீமா ரோஸ் மார்ட்டின் AIADMK சார்பில் போட்டியிட்டு லால்குடி எம்எல்ஏவாக தேர்வாகியிருக்கிறார். மைத்துனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரி காமராஜ் நகர் எம்எல்ஏவாக இருக்கிறார்.












Click it and Unblock the Notifications