ஆம்புலன்சில் இருந்த பெண்ணை ஊரே சேர்ந்து அடித்த கொடூரம்.. பரிதவித்து நின்ற கணவர், மகன்
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கோயில் திருவிழாவின் போது இரு தரப்பினர் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்: கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கோயில் திருவிழாவின் போது இரு தரப்பினர் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மோதலில் காயம் அடைந்த பெண் ஆம்புலன்ஸில் சென்ற போது, அந்த ஊரைச் சேர்ந்த பலரும் தாக்கி உள்ளனர். கணவன், மகன் முன்பே நடந்த இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் சாத்தப்பாடியில் உள்ள மாரியம்மன் கோயிலில் மாசி மகத் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி தீர்த்தவாரி சென்ற சாமி, மீண்டும் ஊர்வலமாக ஊருக்கு திரும்பி இருக்கிறது.

6 பேர் காயம்
அப்போது சாத்தப்பாடியை சேர்ந்தவர்களுக்கும், மேலமணக்குடியை சேர்ந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, இரு தரப்பினரும் மோதிக் கொண்டுள்ளனர். இதில் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர் என 6 பேர் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தை
இதனிடையே இரு கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், தங்கள் ஊரை சேர்ந்தவர்களை தாக்கியவர்ளை கைது செய்ய கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தி நடத்தி, இரு கிராம மக்களையும் கலைந்து போக செய்தனர். இதனிடையே மோதலில் காயமடைந்து ஆம்புலன்சில் சென்றவர்களை சிலர் தாக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.

கதறிய பெண்
அந்த வீடியோவில் ஆம்புலன்சில் பெண் உள்பட சிலர் அமைந்துள்ளனர். திடீரென முகத்தில் துணி கட்டிய நபர் ஒருவர் வேகமாக ஏறி சரமாரியாக பெண் உள்பட சிலரை தாக்கினர். அதனை தொடர்ந்து மேலும் சிலர் ஆம்புலன்சுக்குள் ஏறி வந்து சரமாரியாக தாக்குகிறார்கள். ஆம்புலன்சில் அமர்ந்திருந்த பெண் கதறி துடித்தப்படி இருக்கிறார்.

வழக்கு
கணவர், மகன் முன்னிலையில் ஊரில் பலரும் ஆம்புலன்சில் இருந்த அந்த பெண்ணை தாக்கி இருக்கிறார்கள். இந்த வீடியோ வெளியான பின்னர், ஊரில் பதற்றம் அதிகரித்துள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே ஆம்புலன்சில் இருந்த பெண்ணை மோசமாக தாக்கியவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications