முந்திரி ஏற்றுமதியில் நம்பர் 1.. தொழிலதிபர் டூ எம்.பி; எப்படி கிடைத்தது வாய்ப்பு? யார் இந்த ரமேஷ்?
கடலூர்: கடலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக உறுப்பினர் ரமேஷை மையமாக வைத்து எழுந்துள்ள சர்ச்சையால் கட்சி மேலிடத்துக்கு தர்ம சங்கடமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு மே மாதத்துக்கு முன்பு வரை, அரசியல்வாசமே தெரியாத இவர் திடீரென எம்.பி.ஆனது இன்று வரை கடலூர் மாவட்ட திமுகவினருக்கு புரியாத புதிராகவே உள்ளது.
கொலை வழக்கில் கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் மீது எந்நேரமும் காவல்துறையின் நடவடிக்கை பாயக்கூடும் எனக் கூறப்படும் நிலையில், அவரது பின்னணி என்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

முந்திரி தொழில்
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை பூர்வீகமாக கொண்ட ரமேஷ் ஒரு பிஸினஸ் மேக்னெட். எந்தெந்த வழிகளில் எல்லாம் வரவை பார்க்கலாம் என்பதில் இவர் அத்துபடி. இதனால் படித்து முடித்தவுடன் குடும்பத் தொழிலான முந்திரி வியாபாரத்தை கவனிக்கத் தொடங்கியிருக்கிறார். பண்ருட்டியில் முந்திரி தரம் பிரிக்கும் ஆலைகள் பத்துக்கும் மேற்பட்டதை நடத்தி வரும் இவர், நேரடியாகவும் மறைமுகமாகவும் ஐநூறுக்கும் மேற்பட்டோருக்கு பிழைப்பு கொடுத்து வருகிறார்.

ஏற்றுமதி
முந்திரி ஏற்றுமதியாளர் சங்கத் தலைவராக உள்ள இவர் தொழிலை மட்டும் தான் கவனித்து வந்துள்ளார். முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. சத்யாவின் கணவர் பன்னீர்செல்வத்துக்கும் இவருக்கும் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக இவர் நேரடியாக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் ஐக்கியமாகியிருக்கிறார். அந்த தருணத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வந்ததால் அதில் தனது மகன் கதிரவனை நிறுத்துவதற்கான முயற்சியில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஈடுபட்டிருந்தார்.

தொழிலதிபர்
ஆனால் அதற்கு தலைமை நோ சொல்லிவிட்டதால், கட்சிக்கு புதுவரவான ரமேஷை தலைமையிடம் பரிந்துரைத்து எம்.பி.சீட் வாங்கிக் கொடுத்து வெற்றிபெறவும் வைத்து விட்டார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், தன்னை ஒரு தொழிலதிபராகவே ரமேஷ் காட்டிக் கொண்டுள்ளார். கட்சியினரிடம் மிதப்பாக பேசுவது, அதிகாரத் தோரணையில் வலம் வருவது என இருந்த இவரிடம் கடலூர் திமுகவினர் சற்று விலகியே இருந்தனர்.

ஆர்வமின்மை
இவரும் பெரிதாக கட்சி நிகழ்ச்சிகளில் தலைக்காட்டுவதை தவிர்த்து, முந்திரி தொழிலை மட்டுமே கவனித்து வந்தார். உலகின் பல நாடுகளில் ரமேஷுக்கு வியாபாரத் தொடர்புகள் இருக்கின்றன. இந்த சூழலில் தான், கொரோனாவுக்கு பிறகு அவரது முந்திரி ஏற்றுமதி தொழில் சற்று சரிவைக் கண்டிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து வர வேண்டிய பணம் முழுமையாக வந்துசேரவில்லை. இதனால் ஒரு வித அழுத்தத்திற்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

முழு கவனம்
முந்திரி ஆலையில் முழு கவனத்தை செலுத்தி மீண்டும் பழைய நிலைக்கு வியாபாரத்தை கொண்டு செல்ல நினைத்த ரமேஷ், அடிக்கடி தனக்கு சொந்தமான முந்திரி தரம் பிரிக்கும் ஆலைகளுக்கு விசிட் அடிக்கத் தொடங்கியுள்ளார். அங்கு நடக்கும் சிறு தவறுகளை கூட பூதக்கண்ணாடி வைத்து உற்றுநோக்க ஆரம்பித்தார்.

தொழிலாளி
இப்படித்தான் முந்திரி திருடு போன விவகாரத்தில் கோவிந்தராசு என்ற தொழிலாளியை அழைத்து விசாரித்து அனுப்பியிருக்கிறார். இதனிடையே அவர் ரத்தக் காயத்துடன் உயிரிழந்த விவகாரம் ரமேஷுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது. திமுக எம்.பி.யின் முந்திரி ஆலையில் தொழிலாளி கொலை என பாமக இந்த விவகாரத்தை கையில் எடுத்ததால் ரமேஷ் மீது ஏகக் கடுப்பில் உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

சட்டப்படி
இதனிடையே ஆளுங்கட்சி எம்.பி. என்பதற்காக காவல்துறை விசாரணையை முடக்காமல், சட்டப்படி விசாரணை செய்து எது உண்மையோ அதன்படி நடவடிக்கை எடுக்க முதல்வர் காவல்துறையினருக்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டார். வழக்கு விசாரணை நிறைவு கட்டத்தை எட்டிவிட்டதால் இன்னும் ஓரிரு நாளில் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தெரிந்துவிடும். ரமேஷ் எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போகிறார் என்ற செய்தி கடந்த 2 நாட்களாக உலா வரும் நிலையில், அதனை கடலூர் மாவட்ட திமுகவினர் வெடி வெடிக்காத குறையாக கொண்டாடுகின்றனர்.












Click it and Unblock the Notifications