பிரியாணி கடை உரிமையாளரை வெட்டிக் கொன்ற கும்பல்.. ஓசி பிரியாணி தகராறு காரணமா? ஷாக்கில் நெய்வேலி!
கடலூர்: நெய்வேலியில் பிரியாணி கடை உரிமையாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஓசி பிரியாணி தராததால் ஏற்பட்ட முன் விரோதத்தில் கொலை நடந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு வயது 56. இவரது மனைவி கமலா. இவர்களுக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். கண்ணன் நெய்வேலி சூப்பர் பஜார் பகுதியில் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வந்தார். நெய்வேலி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியில் இந்த பிரியாணி கடைக்கு பல கிளைகள் உள்ளன.

நெய்வேலியில் உள்ள கடையில் நேற்று மாலை வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் கண்ணன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு புறப்பட்டார். நெய்வேலியில் நீதிமன்றம் பின்புறம் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த போது அங்கு நின்றிருந்த அடையாளம் தெரியாத நபர்கள் கண்ணன் மீது திடீரென கற்களை வீசி தாக்கினர்.
இதில் தடுமாறிய கண்ணன் இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்தார். உடனே தன்னை தாக்க வருகிறார்கள் என அறிந்து அவர் எழுந்து ஓட முற்பட்டார். அதற்குள் அந்த கும்பல் சுற்றி வளைத்து கண்ணனை சரமாரியாக வெட்டியுள்ளன. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். ஆனால் அந்த கும்பல் கண்ணனின் முகம் தெரியாத அளவிற்கு மீண்டும் மீண்டும் கத்தியால் வெட்டி முகத்தை சிதைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் இதனைப் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடலூர் மாவட்ட எஸ்.பி ராஜாராம், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து கொலை நடந்த இடத்தை பார்வையிட்டார்.
இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த மாதம் கண்ணனின் பிரியாணி கடைக்கு வந்த சிலர் ஓசியில் பிரியாணி கேட்டு தகராறு செய்துள்ளனர். இது தொடர்பாக கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் தெர்மல் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதையடுத்து அடுத்த நாள் கண்ணனின் கடைக்கு வந்து அவரை கத்தியால் வெட்டியுள்ளனர். இந்த முன் விரோதம் காரணமாக கண்ணன் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். நெய்வேலியில் பிரியாணி கடை உரிமையாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications